சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள்.. புதிய மாற்றம்.. பயணிகள் அறிய வேண்டியவை
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் ஆப் மூலம் 20 சதவீத தள்ளுபடி கட்டணத்துடன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ம் ஆண்டில் அமலுக்கு வந்தன. இதன்படி சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் உடனடியாக தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.அநேகமாக இன்னும் இரண்டு வருடங்களில் பணிகள் முழுமையாக முடிந்து ரயில்கள் ஓடத்தொடங்கிவிடும்..
தற்போதைய நிலையில் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் பரங்கிமலையில் இருந்து புறப்படும் ரயிலில் ஏறினால் வடபழனி, கோயம்பேடு , திருமங்கலம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் போன்ற இடங்கள் வழியாக சென்ட்ரல் போக முடியும். விம்கோ நகரில் இருந்து புறப்படும் ரயிலில் ஏறினால் விமான நிலையம் வரை போக முடியும். சென்னை அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, வடபழனி சாலை ஆகிய மூன்று பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இப்போது மெட்ரோ ரயில்கள் அங்கு ஓடுவதால் பலரும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் எப்போதுமே மெட்ரோ ரயிலில் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. நல்ல வரவேற்பும் இருக்கிறது. பேருந்துகளுக்கு நிகராக மட்டுமே கட்டணம் வசூலிக்கிறது சென்னை மெட்ரோ.. 10 ரூபாய் தொடங்கி 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறது. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு மாதசீட்டு, குழுவாக பயணம் செய்தால் சலுகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications