சிங்கார சென்னை கார்டு பெறுவது இனி ரொம்ப ஈஸி.. 20% ஆஃபர்! மெட்ரோ நிர்வாகம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது. சிங்கார சென்னை அட்டை பெறும் நடைமுறையை எளிமையாக்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செல்போன் எண் மூலம் எளிதாக இனி சிங்கார சென்னை கார்டை பெற்று சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

சென்னை மெட்ரோ: பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு சலுகைகள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. கட்டண சலுகை, விழாக் கால சலுகை, முக்கியமான நாட்களில் கூடுதல் நேரம் நீட்டிப்பு, எளிதாக டிக்கெட் எடுக்கும் வசதி, அதிக முறை பயணிப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சிறப்பு சலுகைகள் காரணமாக, நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வதற்கு ஏராளமானோர் மெட்ரோ ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சிங்கார சென்னை அட்டை: இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக சிங்கார சென்னை அட்டையை பெறுவதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எளிமையாக்கி உள்ளது. சிங்காரா சென்னை அட்டை, கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது மெட்ரோ பயணிகளிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சம் சிங்கார சென்னை அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இனி ரொம்ப ஈசி: இந்த சிங்கார சென்னை அட்டை பெறுவதற்கு இதற்கு முன் பயணிகளிடம் KYC சரிபார்ப்பு பதிவு தேவைப்பட்டது. இந்நிலையில் தற்போது பயணிகளின் வசதிற்காக KYC சரிபார்ப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் கைபேசி எண்ணை வழங்கி OTP மூலம் உறுதிப்படுத்தினால், மெட்ரோ நிலையங்களில் சிங்காரா சென்னை அட்டையை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய வசதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனுடன் 20% தள்ளுபடியும் உண்டு.
சென்னை மெட்ரோ அல்லது பிற மெட்ரோக்களில் பயணத்தை எளிதாக்குவதோடு மெட்ரோ நிலைய வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தவும் சிங்காரா சென்னை அட்டை உதவுகிறது. பயணிகளுக்கு விரைவான, எளிதான அனுபவத்தை சென்னை மெட்ரோ தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பயணச்சீட்டு பெரும் முறைகளை பயணிகளின் வசதிக்காகவும் மாற்றி வருகிறது.
20% ஆஃபர்: மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச் சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக, Paytm App மூலமாகவும் பயணிகள் பயணச் சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications