மெகா பாறைகள்.. கற்கள்.. களமிறங்கியது டாடாவின் "ராட்சச" மிஷின்.. சென்னை மெட்ரோவில் திக் திக்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 பணிகள் தொடங்கி உள்ளன. இதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள குறிப்பிட்ட பாதையில் மெட்ரோ அமைப்பது மிகவும் கடினம் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், முக்கியமான சில மெட்ரோ நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி டாடா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் ரூபாய் 1,204. 87 கோடி வழங்கியுள்ளது. ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், கெல்லிஸ் உள்ளிட்ட 4 இடங்களில் ரயில் நிலையங்கள் கட்ட டாடா திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இங்கே பூமிக்கு கீழே மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தரையோடு தரையாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இங்கே அமைக்கப்பட உள்ளன.
மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் உள்ள பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் உள்ளிட்ட நான்கு நிலையங்களுக்கான ஒப்பந்தம் கடந்த வாரம் தினேஷ்சந்திரா-சோமா நிறுவனத்திற்கு ₹1,063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
முன்னதாக இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
மிகவும் கடினம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 பணிகள் தொடங்கி உள்ளன. இதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள குறிப்பிட்ட பாதையில் மெட்ரோ அமைப்பது மிகவும் கடினம் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் மற்றும் நாதமுனி இடையே நிலத்திற்கு அடியே மெட்ரோ பாதை அமைக்க டாடா ப்ராஜெக்ட்ஸ் மிகக் குறைந்த விலையில் ஏலம் எடுத்துள்ளது. 5.8 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதை முழுக்க மிகப்பெரிய மெகா பாறைகள், கற்கள் மட்டுமே உள்ளன. இதனால் இதை குடைவது மிகவும் கடினம். இந்த பகுதிக்கு டாடாவின் மிஷின்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. பாறை மண் காரணமாக இங்கே பணிகளை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும்.
மாதவரம் & சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் உள்ள முக்கியப் பாதையில் சீனிவாச நகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று மெட்ரோ தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடக்கும் மெட்ரோ பணிகள் சென்னையில் செய்யப்பட்ட மெட்ரோ பணிகளில் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.
மற்ற ஒப்பந்தம்: சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டிட வேலை, கட்டிடக்கலை உட்பட, இயந்திரம், மின் மற்றும் பிளம்பிங் (MEP), காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) மற்றும் அனைத்து தொடர்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பி. ராம்பிரசாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications