சக்சஸ்.. டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை.. சென்ட்ரல் வழியாக ஜம்மென்று போகுது மெட்ரோ ரயில்
Recommended Video
சென்னை: சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வழியான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை முடிவடைந்துள்ள நிலையில் அங்கு இன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்ணா சாலை, ஏ.ஜி.டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையொட்டி இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இந்த மார்க்கத்தில் நடைபெற்றது. ரயில் சோதனை ஓட்டத்தை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் ஆய்வு செய்தார்.
ஆயிரம்விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் வழியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றம், மண்ணடி வழியாக வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. ரயில் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 கி.மீ தூரம் கொண்ட இந்த மெட்ரோ ரயில் பாதை முழுக்க சுரங்க பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆணையரிடம், பாதுகாப்பு சான்றிதழை பெற்றதும், இம்மாத இறுதிக்குள் அல்லது, ஜனவரி ஆரம்பத்தில் பயணிகளுக்காக இந்த மார்க்கத்தில் ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வட சென்னையுடன் இணைக்க கூடிய வழித்தடம் என்பதால், இந்த பயணம் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது.