சென்னை மெட்ரோ ரயில்களில் அக்டோபர் மாதத்தில் 90 லட்சம் பேர் பயணம்.. அதுவும் ஒரே நாளில் இவ்வளவா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக விமான சாகசம் நடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சுமார் 4 லட்சம் பயணிகள், மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில்: பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. கட்டண சலுகை, விழாக் கால சலுகை, முக்கியமான நாட்களில் கூடுதல் நேரம் நீட்டிப்பு, எளிதாக டிக்கெட் எடுக்கும் வசதி, அதிக முறை பயணிப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அக்டோபர் மாதம் 90 லட்சம் பேர்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் காரணமாக, நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வதற்கு ஏராளமானோர் மெட்ரோ ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 90 லட்சம் பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை எவ்வளவு பேர்: நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 15 ஆயிரத்து 008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பயணிகளும், மே மாதத்தில் 84 லட்சத்து 21 ஆயிரத்து 072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84 லட்சத்து 33 ஆயிரத்து 837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95 லட்சத்து 35 ஆயிரத்து 019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95 லட்சத்து 43 ஆயிரத்து 625 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து 77 ஆயிரத்து 697 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
எந்த வழியில் எவ்வளவு பேர்?: அதிகபட்சமாக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அன்று 4 லட்சத்து 042 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்வு நடந்த அன்று, Manual Passenger Entry-ல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 59,776 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, அக்டோபர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 28,88,168 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,400 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,75,666 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி 20,50,699 பயணிகள் பயணம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications