கழுத்தில் போடப்படும் துளை? விஜயகாந்த்துக்கு ‛டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை? அப்படினா என்ன தெரியுமா?
சென்னை: சுவாச பிரச்சனையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 14 நாட்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த்துக்கு ‛டிரக்கியாஸ்டமி' சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். தேமுதிக கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தார். அதன்பிறகு அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சினிமா, அரசியலில் இருந்து அவர் விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் சில நாட்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 18 ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு மார்பு சளி, இருமல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இன்று மியாட் மருத்துவமனை அவரது உடல்நலம் குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டது.
அதில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்த் சுவாச பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது பொதுவாக சுவாச பிரச்சனைக்கு தீர்வு காணும் சிகிச்சையாகும். சாதாரணமாக சுவாசிக்க முடியாதவர்கள் அல்லது நுரையீரல் பிரச்சனையால் சுவாசிக்க இயலாதவர்களுக்கு இந்த சிகிச்சை என்பது அளிக்கப்படும்.
இந்த சிகிச்சை என்பது குரல்நாண்களுக்கு கீழ் கழுத்தில் ஒரு துளையிடப்பட்டு அதன் வழியாக குழாய் மூலம் சுவாசக்குழாய்க்கு சுவாசம் அளிப்பதாகும். மேலும் இந்த சிகிச்சை என்பது அடைப்புகளை நீக்கி நுரையீரலுக்குள் காற்று நுழைய வாய்ப்பை ஏற்படுத்தும். இது வலி நிறைந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. இதனால் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் அதற்கு முன்பாக மயக்கமருந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications