கோடை விடுமுறை விட்டாச்சு! சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயிலும் வந்தாச்சு.. எப்போது தெரியுமா?
சென்னை: சென்னை- நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிழைப்புக்காகவும் பள்ளி படிப்புக்காகவும் சென்னை வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கியுள்ளார்கள்.

இதனால் நிறைய கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வரும் 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மற்றும் வரும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இதேபோல, நாகர்கோவிலில் இருந்து வரும் 14, 28 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் 15, 29 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06022) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயிலானது சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும்.
பொதுவாக பொங்கல், தீபாவளி, ஈஸ்டர், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோடை விடுமுறையின் போதும் சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க ஏதுவாக இது போன்ற சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுபோல் வந்தே பாரத் ரயில்களும் பண்டிகை காலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஈஸ்டர் பண்டிகைக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications