சென்னை மத்திய கைலாஷில் ‘எல்' வடிவ மேம்பாலம் மட்டுமல்ல.. ஜிஎஸ்டி ரோடு வரை வரும் புதிய பிரம்மாண்டம்
சென்னை: சென்னை சர்தார் படேல் சாலையையும், ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையையும் இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ₹46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 640 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தின் பணிகள் கணிசமாக முடிந்துவிட்டன.
தென்சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு என்றால் ஓஎம்ஆர் சர்தார் வல்லபாய் படேல் சாலை சந்திக்கும் கஸ்தூரி பாய் நகர் ரயில் நிலையம் அமைந்துள்ள மத்திய கைலாஷ் பகுதி தான்.. இங்கிருந்து நேராக சென்றால் பெசன்ட் நகர், மெரினா, அடையாறு, காமராஜர் சாலையை அடையலாம்.. அப்படியே இடதுபுறம் திரும்பினால் இந்திரா நகர், திருவான்மியூர், துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி போகாலாம்.

மத்திய கைலாஷ் சந்திப்பு
அதேபோல் சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வரை அப்படியே சென்று செங்கல்பட்டும் போக முடியும். அதேபோல் இந்த பக்கம் ஜிஎஸ்டி சாலையை நோக்கி பயணித்தால், கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, கிண்டி என பயணிக்கலாம். இந்த சாலையில் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும்.
46 கோடியில் எல் வடிவ மேம்பாலம்
எனவே சென்னை சர்தார் படேல் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சர்தார் படேல் சாலையையும், ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் 'எல்' வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ₹46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 640 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டன. நிலம் கையகப்படுத்துதல் பணிகளும் முடிந்துவிட்டன. அந்த பகுதியில் இடையூறாக இருந்த மின்மாற்றிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. இந்நிலையில் இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அக்டோபரில் முடியும்
இந்நிலையில் சர்தார் படேல் சாலையையும், ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையையும் இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எவ வேலு உத்தரவிட்டார்.
ஆறு வழிச்சாலை
மேலும் சர்தார் படேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் ஜி.எஸ்.டி. சாலை வரை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருக்கிறது. எனவே அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்போதைய 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எவ வேலு உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், சென்னை பெருநகர கண்காணிப்புப் பொறியாளர் ச.ஜவஹர் முத்துராஜ், சென்னை கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் பி.சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications