சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி.. பஸ்களில் சூப்பர் மாற்றம்.. இனி யுபிஐ மூலமே டிக்கெட் எடுக்கலாம்
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது அனைத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பேருந்து, பறக்கும் ரயில்கள், புறநகர் ரயில்கள், மெட்ரோ எனப் பல வகை பொது போக்குவரத்து இருந்தாலும் கூட பொதுமக்கள் அதிகளவில் பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறார்கள்.

நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியும் என்பதாலேயே பொதுமக்கள் பேருந்து சேவையை ஆர்வமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது நகரில் சுமார் 30+ பணிமனைகளில் இருந்து தினசரி 3200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை பேருந்துகள்: சென்னையைப் பொருத்தவரை இப்போது 3 வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண (ஒயிட் போர்ட்), விரைவு பேருந்து (க்ரீன் போர்ட்/ எக்ஸ்பிரஸ்) மற்றும் சொகுசு பேருந்து (டிஜிட்டல் போர்ட்) என்று மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கட்டணங்களும் அதற்கேற்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண பேருந்துகளில் மட்டும் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம். மற்ற வகை பேருந்துகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போது மக்கள் மற்றும் நடத்துநருக்கு இடையே சில்லறை பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதாகப் புகார்கள் உள்ளன. இதைத் தீர்க்க டிஜிட்டல் முறையில் கட்டணத்தை வசூலிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப். மாதம் இறுதியில் க்யூர் ஆர் கோட் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை எம்டிசி பேருந்துகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது.
யுபிஐ மூலம் டிக்கெட்கள்: முதற்கட்டமாக சில பஸ்களில் மட்டும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே அண்டை மாநிலங்களில் இந்த வசதி இருக்கும் நிலையில், சென்னையில் பிப். மாதம் தான் சோதனை முறையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வெற்றியடைந்ததால் இப்போது இந்தத் திட்டத்தை நகரம் முழுக்க விரிவுபடுத்தியுள்ளனர்.
அனைத்து பேருந்துகளிலும்: இது தொடர்பாகச் சென்னை எம்டிசி தனது எக்ஸ் பக்கத்தில், "22 எம்டிசி டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETMகள்) இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ETMகள், இப்போது எங்கள் அனைத்து டெப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ, கார்டு மற்றும் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இதற்காக எங்கள் நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எம்டிசி பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம். சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளில் பயணிக்கும் போது சிக்கல் ஏற்பட்டால் அல்லது இதில் சந்தேகங்களுக்கு 149 என்ற எண்ணைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சில்லறை பிரச்சினை இருக்காது: யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் இந்த வசதி படிப்படியாக நகரில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சில்லறை பிரச்சினை பெரியளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications