மாற்றி யோசிக்கும் சென்னை மக்கள்.. வெள்ளத்தில் காரை பாதுகாக்க புது ஐடியா! வெறும் 15 நிமிடம் போதும்
சென்னை: சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தங்களின் கார்களை பாதுகாக்க பார்க்கிங்கில் ‛ரேம்ப்' அமைத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் மழை வெள்ளத்தில் இருந்து கார்களை பத்திரப்படுத்தலாம் என்பதால் பொதுமக்கள் ‛ரேம்ப்' அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை.. தமிழகத்தின் தலைநகரான சென்னை அவ்வப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தால் மழை வெள்ளம் வந்து விடுமோ? என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் வசிக்கும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலையோரம், வீட்டின் முன்புறம், பார்க்கிங் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி மக்களுக்கு செலவு வைத்தன.
இந்த வாகனங்கள் ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் செலவு வைத்ததோடு மட்டுமின்றி ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அதனை சர்வீஸ் செய்வதில் தாமதமும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மாதம் சென்னைக்கு அதி கனமழைக்கான ‛ரெட்அலர்ட்' விடுக்கப்பட்டபோது வேளச்சேரி மற்றும் அதனை சுற்றிய மக்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை பாதுகாப்பாக பார்க்க செய்தனர். வேளச்சேரி மேம்பாலத்தில் இருபுறங்களிலும் கார்கள் அணிவகுத்து நின்றது பேசும்பொருளானது. அதேபோல் பலரும் தங்களின் இருசக்கர வாகனங்களை வீடுகளுக்குள் ஏற்றி பாதுகாத்தனர்.
தற்போது நவம்பர் மாதத்தில் சென்னையில் மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு இல்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மாதத்தில் 10 நாட்கள் மற்றும் டிசம்பர் மாதத்தில் 31 நாட்கள் இருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இப்போதே தங்களின் கார்களை பாதுகாக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சென்னையில் பலரும் தற்போது தங்களின் கார்களை பாதுகாக்க பார்க்கிங் பகுதிகளில் ‛ரேம்ப்' அமைத்து வருகின்றனர். இந்த ‛ரேம்ப்' மீது கார்களை நிறுத்துவதன் மூலம் வாகனங்கள் தண்ணீரில் மூழ்காமல் இருக்கும். சென்னை பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் தற்போது ‛ரேம்ப்' அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி தற்போது பல இடங்களில் இரும்பு மற்றும் மரப்பலகையை கொண்டு ‛ரேம்ப்' அமைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பள்ளிக்கரணையில் வசிக்கும் அரவிந்த் என்பவர் கூறுகையில், ‛‛ கடந்த மழையில் எனது இன்னோவா கார் வெள்ளத்தில் மூழ்கியது. இரவோடு இரவாக பெய்த கனமழையால் காரின் இன்ஜினுக்குள் தண்ணீர் சென்றதால் பழுது ஏற்பட்டது.
இந்த பழுதை சரிசெய்ய ரூ.1.5 லட்சம் வரை செலவு ஏற்பட்டதோடு, காரை சரிசெய்து பயன்படுத்த 5 மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் ‛ரேம்ப்' அமைக்கிறேன். தற்போது ஸ்டீல் மூலம் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தரையில் இருந்து இரண்டரை அடிக்கு மேல் காரை நிறுத்த முடியும். அதோடு 3 அடிக்கு தண்ணீர் தேங்கினால் மட்டுமே காருக்குள் தண்ணீர் வரும். இதன்மூலம் காரை என்னால் பாதுகாக்க முடியும்'' என்றார்.
இதுபற்றி சென்னையில் செயல்பட்டு வரும் வாகன் ஸ்டாக் பார்க்கிங் சொல்யூஷன் நிறுவனத்தை சேர்ந்த அஸ்வின் பத்ரி என்பவர் கூறுகையில்,‛‛சென்னையில் ‛ரேம்ப்' அமைப்பது மிகவும் எளிமையானது. இதனை அமைக்க வெறும் 15 நிமிடங்கள் போதும். அதோடு ‛ரேம்ப்' அமைப்பதை நாங்கள் கார் உரிமையாளர்களுக்கும் கற்றுக்கொடுக்கும்போது அவர்களே வெள்ள அபாயத்தின்போது அதனை செயல்படுத்தி திரும்ப அகற்றி கொள்ள முடியும். தற்போது பள்ளிக்கரணை, அசோக் நகர், தாம்பரம், ஐயப்பன்தாங்கல், வேளச்சேரி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் ‛ரேம்ப்' அமைக்க எங்களிடம் கூறியுள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications