கிளாம்பாக்கத்தில் நள்ளிரவை தாண்டியும் குவிந்த கூட்டம்.. சொந்த ஊருக்கு படையெடுத்த சென்னைவாசிகள்
சென்னை: இன்று வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சென்னை மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றிரவே கிளம்பினர். இதன் காரணமாக நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் அங்குக் கூட்டம் அதிகரித்தது. சிலர் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இன்று நாடு முழுக்க 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் போடப்பட்டு இருந்தது. மறுபுறம் தொடர் விடுமுறை காரணமாகப் பொதுமக்கள் பலரும் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், நாளை சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் சென்னைவாசிகள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவிருந்தனர்.. எப்போதும் இதுபோல தொடர் விடுமுறை வரும்போது ரயில் டிக்கெட்கள் பல மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடும்.
இதனால் அதிகபட்சப் பயணிகள் பேருந்துகள் மூலமாகவே சொந்த ஊர் திரும்புவார்கள். இந்த மூன்று நாள் தொடர் விடுமுறை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை முதலே கூட்டம் மெல்ல அதிகரித்த நிலையில் இரவு 9 மணிக்கு மேல் கூட்டம் அலைமோதியது. இருப்பினும், அங்குப் பேருந்துகள் உரிய எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை என மக்கள் புகாரளித்துள்ளனர்.
மேலும், முன்பதிவு செய்த பேருந்துகள் கூட உரிய நேரத்தில் வரவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், சில ஊர்களுக்கு பேருந்துகள் இருந்தாலும் அவை இயக்கத் தாமதம் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அங்குப் பயணிகளுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கூட ஏற்பட்டது.
தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு நேற்றைய தினம் 300+ சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், அதையும் தாண்டி கூட்டம் அதிகரித்ததாகத் தெரிகிறது. மேலும், பேருந்துகளும் சரியான நேரத்தில் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். பலரும் தங்கள் குடும்பத்துடன் ஊருக்குச் செல்ல வந்திருந்த நிலையில், சிரமத்தைச் சந்தித்ததாக புகாரளித்தனர்.
இரவு 9.30-10 மணிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருத்தாச்சலம், திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இல்லை எனப் பயணிகள் குற்றம்சாட்டினர். அதன் பிறகு பேருந்துகள் மெல்ல இயக்கப்பட்ட பிறகே கிளாம்பாக்கத்தில் கூட்டம் குறைந்தது.












Click it and Unblock the Notifications