சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பக்கத்துல என்ன அது? ஆட்டோ ஓட்டுநர்களின் கருணையால் பிழைத்த உயிர்!
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பிறந்து 3 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் அழுகுரல் கேட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டுள்ளனர்.
சென்னையின் மிகவும் பிசியான ரயில் நிலையங்களில் பெரம்பூரும் ஒன்று. மற்ற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களுக்கு இந்த ஸ்டேஷன்தான் என்ட்ரி பாயிண்ட். கேரளா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, மேற்குவங்கம், மும்பை என இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் வரும் ரயில்களும் பெரம்பூர் தாண்டிதான் சென்னைக்குள் நுழையும். அதேபோல சென்னை சென்ட்ரலிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் பெரம்பூரை கடந்துதான் செல்லும். அந்த வகையில் பெரம்பூர் ரயில் நிலையம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

எனவே பெரம்பூருக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் பெரம்பூரில் நின்று செல்வதால், புறநகர் ரயில் பிடிக்க பயணிகள் பெரும்பாலும் இங்கேயே இறங்கிவிடுகின்றனர். இப்படி பிஸியாக இருக்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் 3 மாத பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டிருக்கிறது. இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றிருக்கின்றனர். அங்கு கட்டை பையில் பச்சிளம் குழந்தை ஒன்று பால் பாட்டிலுடன் இருந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்தபோது அது 3 மாத கைக்குழந்தை என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே வள்ளுவர் கோட்டம் பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தையை பத்திரமாக மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களான காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் குறித்து அப்பகுதி மக்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். 3 மாத பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். யார் விட்டு சென்றது? எதற்காக விட்டு சென்றார்கள்? குழந்தையை கைவிட்டது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா? வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகரின் மிக பரபரப்பான பகுதியில் பச்சிளம் குழந்தையை கைவிடப்பட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications