பயணிகளே எதிர்பார்க்காத பிளான்! 50 ரயில் ஸ்டேஷன்களில் ஷாப்பிங் மால்கள்.. மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 ஆம் கட்ட வழித்தடத்தில் அமையும் முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவையும் அமைக்கும் வடிவமைப்புடன் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை முதன் முதலாக தொடங்கப்பட்டது. துவக்கத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நகரின் மைய இடங்களுக்கு நெரிசல் இன்றி சொகுசாக பயணிக்க முடியும் என்பதால் மெட்ரோ ரயில் பயணத்தை சென்னை சிட்டி மக்கள் பலரும் விரும்புகிறார்கள்.

மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் கட்டணம் இன்றி இதர வழிகளிலும் வருமானம் ஈட்ட திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வளாகங்கள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-
ஷாப்பிங் மால்கள்: மெட்ரோவில் ரயில் கட்டணம் மட்டும் இல்லாது, இதர வழிகளிலும் வருமானம் ஈட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது காலியாக உள்ள இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு பகுதிகளை ஒட்டி கடைகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் திட்டமிடபட்டுள்ளது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்: இது குறித்து ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி வணிக வளாகங்கள் அமைப்பதன் மூலம், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் ஆய்வு நடைபெறுகிறது. சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2028-ல் மெட்ரோ 2-ஆம் கட்ட வழித்தடம் தொடங்கும் போதே பயன்பாட்டிற்கு வந்துவிடும்" என்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டியே வணிக வளாகங்கள், உணவகங்கள், கடைகள் போன்றவை அமையும் பட்சத்தில் பயணிளுக்கு இது பெரிதும் பயனளிப்பதாக இருக்கும் என்பதால், பயணிகள் மத்தியில் மெட்ரோவின் இந்த முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ 2ஆம் கட்ட வழித்தடம்: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை பொறுத்தவரை மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
63 ஆயிரம் கோடி மதிப்பீடு: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடம் சென்னையின் மையப்பகுதியில் செல்கிறது. சென்னையின் மிக முக்கியமான வழித்தடமாக இது உள்ளது. இந்த வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ரூ.187 கோடி செலவில் பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 வழித் தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் மொத்தம் 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட் ரோ பணிகள் நடைபெறுகின்றன. இதில், 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications