இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு! சென்னை போலீஸ் ஆக்ஷன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு நிர்வாகம் முன்வரதாதைக் கண்டித்தும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடதுசாரி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக போலீசார் அனுமதி அளிக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்டித்து இடதுசாரி கட்சியினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடி போராட்டம் நடத்தியதன் காரணமாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications