ரௌடிகளை ஒடுக்க என்கவுண்டர் நடக்குமா? சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சொன்ன “அடடே” பதில்!
சென்னை: ரௌடிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்தார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.
கடந்த 5ஆம் தேதி இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாக விமர்சித்தனர்.

சென்னைக்கு புதிய கமிஷனர்: இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ்ஸை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை மாநகரின் 110-வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல் துறையில் 1998-ஆம் ஆண்டு அருண் ஐபிஎஸ் பணிக்கு சேர்ந்தார். நாங்குநேரி, தூத்துக்குடி, கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சென்னையிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் அருண். கடந்த ஆண்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்ற அருண், இன்று சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்.
அருண் ஐபிஎஸ் பேட்டி: சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் சென்னையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் துணை ஆணையர், இணை ஆணையர் என சட்டம் ஒழுங்கிலும், போக்குவரத்து பிரிவிலும் பணிபுரிந்துள்ளேன். எனவே, சென்னை எனக்கு புதிது இல்லை. காவல் ஆணையர் பதவியை மற்றொரு முக்கிய பொறுப்பாக பார்க்கிறேன்.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து சிக்கல்கள், காவல்துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது, கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன்" என்றார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடா: சமீபகாலமாக சட்டம் - ஒழுக்கு சீர்குலைந்து விட்டது என்று குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த சென்னை காவல் ஆணையர் அருண், "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் கூறப்படுகிறது? காலங்காலமாக குற்றங்கள் நடப்பதும், அதை காவல்துறை தடுப்பதும் நடந்து வருகிறது. புள்ளி விவரங்கள்படி பார்த்தால் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் குறைவான கொலை சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைச் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
என்கவுண்டர் நடக்குமா?: ரௌடிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அருண், "என்கவுண்டர் என்ற ஒன்றே கிடையாது." என்றார். மீண்டும் அந்த செய்தியாளர் என்கவுண்டருக்கு வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்த ஆணையர் அருண், "ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ.. அந்த மொழியில் சொல்லிக் கொடுப்போம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும், குற்றம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம்; ரவுடிகளை ஒடுக்க வேண்டும் திறமையான கண்காணிப்பை மேற்கொண்டாலே குற்றங்களை குறைக்க முடியும்" என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications