தீபாவளி நாளில் ஜெயிலுக்கு போக போறீங்க! "ஹை அலர்ட்.." சென்னையில் இறக்கப்பட்ட தனிப்படை.. என்னாச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் போலீசார் எடுக்கும் முக்கிய நடவடிக்கை குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. இந்தாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காகத் தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமையும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களில் வசிக்கும் மக்களும் கூட தீபாவளி சமயத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடுவார்கள். இந்தாண்டும் கூட சென்னையில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பினர்.
தீபாவளி: மேலும், தீபாவளி என்றால் பட்டாசு தான். பட்டாசுகள் இல்லாத தீபாவளியை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இருப்பினும், அதிகரிக்கும் காற்று காசு, புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசுகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாகக் காற்று மாசு உச்சத்திற்குச் செல்லும் நிலையில், பட்டாசுகளை வெடிப்பதில் கட்டுப்பாடு தேவை என உச்ச நீதிமன்றமே கூறியது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்படும். அதன்படி இந்த முறை சென்னையில் பட்டாசுகளை வெடிக்கச் சென்னை போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தனர். அதாவது காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதுவும் 125 டெசிபலுக்கு கீழ் ஒலி எழுப்பும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தனிப்படை: இதற்கிடையே இந்த 2 மணி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடிப்பவர்களைப் பிடிக்கச் சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களைப் பிடிக்கத் தலைநகர் சென்னையில் உள்ள 102 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் தலா 2 போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் அனைவரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடிப்போர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரச் சென்னையில் தீபாவளி சமயத்தில் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 18,000 போலீசார் ஈடுபட உள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாடுகள்: இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள்.

இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு, வேடிக்கை பார்க்க முயன்றால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளைக் கொளுத்தித் தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாகப் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.ஈரமுள்ள பட்டாசுகளைச் சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது. தீ விபத்துகள் எதாவது ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண் 101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108, தேசிய உதவி எண் 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications