இப்படி தப்பா நினைச்சுகிட்டு ஹெல்மெட் போடாம வந்தீங்கன்னா பைன்தான்.. சென்னை போலீஸ் முக்கிய வேண்டுகோள்
Recommended Video
சென்னை: ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் இனி 100 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இத்துடன் ஹெல்மெட் அணிவதில் சில நேரங்களில் விலக்கு உள்ளதாக வாகன ஓட்டிகள் நினைப்பதற்கும் விளக்கம் அளித்துள்ளனர்.
மோட்டர் வாகன சட்ட திருத்தம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. எனவே மோட்டர் வாகன சட்டம் 2019ன் படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அபராத தொகை ரூ.100 இல் இருந்து அணி 1000 ரூபாயாக அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இரு சக்சர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையேன்றால் அவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், "ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகள் பலர், ஹெல்மெட் பட்டையை பூட்டாமல் செல்கிறார்கள். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளை பள்ளிகளில் விடுகின்ற நேரமும் கடைகளுக்கு செல்கின்ற நேரமும் ஹெல்மெட் அணியாமல் செல்ல விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தவறாக வாகன ஓட்டிகள் நினைத்து கொள்கிறார்கள்.
இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம். இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் அணிந்தே வாகனத்தை ஓட்டுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்பதிலும் தங்களின் சந்ததிகளை காப்பதிலும் காவல் துறையோடு கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்கள்.