காணாமல் போன லாக்டவுன்... தேடிய பெற்றோர் - 3 நாட்களுக்கு பிறகு மீட்ட கோயம்பேடு போலீஸ்
அம்பத்தூரில் மாயமான குழந்தை லாக்டவுன் 3 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை: மூன்று நாட்களாக லாக்டவுனை காணாமல் தவித்த பெற்றோர்களுக்கு தேடி கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர் கோயம்பேடு காவல்நிலைய காவல்துறையினர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் காவல்துறையினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது பிறந்த குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்டியுள்ளனர் பெற்றோர்கள். 2020ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட், லாக்டவுன், குவாரண்டைன் என பல பெயர்களை பெற்றோர்கள் சூட்டியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் இவரது மனைவி புத்தினி தங்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பிள்ளைக்கு லாக்டவுன் என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். அந்த லாக்டவுன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போகவே காவல் நிலையத்தில் புகார் அளித்து தற்போது கண்டு பிடித்துள்ளனர். காணாமல் போன லாக்டவுன் கண்டு பிடிக்கப்பட்டது எப்படி பார்க்கலாம்.

லாக்டவுன் மாயம்
கிஷோர், புத்தினி தம்பதியினருக்கு ஆகாஷ்,8 பிரகாஷ்,6 துர்கி 5 மற்றும் லாக்டவுன் என்கிற ஒன்றரை வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான பணியில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் தங்கியிருந்த ஷெட்டிற்குள் கட்டிலில் படுத்துக் கிடந்த குழந்தை லாக்டவுன் காணாமல் போனார்.

போலீசில் புகார்
காணமல் போன குழந்தையை தேடி வந்த பெற்றோர், அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போலீசார், மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பஸ்சில் அழுத குழந்தை
இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சேலத்திற்கு புறப்பட தயாராக இருந்த பஸ்சில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது இது பற்றி அங்கிருந்த பயணிகள் சிலர் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தையான லாக்டவுன் என்பது தெரியவந்தது.

குழந்தையை மீட்ட போலீஸ்
கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் அம்பத்தூர் போலீஸ் மூலம் குழந்தை லாக்டவுனை அவரின் பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு பிறகு போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்து பேருந்தில் வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்துள்ளதால் குற்றவாளிகளை கண்டறிவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே அனைத்து கேமராக்களையும் சி.எம்.டி.ஏ நிர்வாகம் முறையாக பராமரித்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications