"உங்க ஊருக்கு போங்கடா.." ரயிலில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்.. பாய்ந்த காவல்துறை நடவடிக்கை!
ரயிலில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்குதல் நடத்திய தமிழர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 'உங்க ஊருக்கு போங்கடா' என்று வடமாநில இளைஞர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்பதால், தமிழ்நாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் வடமாநில தொழிலாளர்களையே பணியமர்த்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஃபாஸ்ட் புட் கடைகள், டீ கடைகளில் அதிகளவிலான வடமாநில தொழிலாளர்களே பணி செய்து வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள்
குறிப்பாக கட்டட தொழில்களில் வடமாநில தொழிலாளர்களே அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்புகளை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அண்மையில் பிரபல யூடியூப் சேனலில் வடமாநில தொழிலாளர்கள் பற்றி வெளியான காணொலி மக்களிடையே அதிகளவில் பேசப்பட்டது. அதேபோல் தமிழர்களின் வாய்ப்பையும் வடமாநில மக்கள் ஆக்கிரமிப்பதாகவும் சில அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.

வெறுப்பு
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழ்நாட்டில் கால் பதிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று பேசி வருகிறார். அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாலும், ஒட்டுமொத்தமாக தீரன் படத்தில் வரும் பவாரியாஸ் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இப்படி சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் பிரச்சாரம் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மீது மக்கள் மத்தில் வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.

குஷ்பு ட்வீட்
இந்த வெறுப்பு காரணமாக சில இடங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்கும் போக்கு உருவாகியுள்ளது. அந்த வகையில் ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர்களை தமிழர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் உங்கள் ஊருக்கு போங்கடா என்று தாக்குதல் நடத்தும் தமிழ் ஆள் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கெட்ட வார்த்தையிலும் திட்டுகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகை குஷ்பு, மொழி கர்வம் அரசியலையும், சமூக வலைதளங்களையும் ஆதிக்கம் செலுத்தும்போது இதுதான் நடக்கும்.
|
வழக்குப்பதிவு
ஆதரவற்ற இவர்களை தாக்குவது வீரம். பிரதமர் மோடியை தவறாக பேசுகிறார்கள். தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது தேசிய அளவில் எதிரொலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications