"நானும் பாப்பாவும் போறோம்..".. வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சென்னை கர்ப்பிணி தற்கொலை
சென்னை: என் சாவுக்கு என் மாமியார்தான் காரணம் என தனது மூத்த சகோதரிக்கு ஆடியோவை அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் திநகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன முதல் நாளிலிருந்து இந்துமதியின் மாமியார் சாந்தி, புதுப்பெண் என்றும் பாராமல் அவ்வப்போது திட்டியதாக தெரிகிறது. அந்த பெண்ணை ராசியில்லாதவள் என்றும் கரித்து கொட்டியது தெரியவந்தது.

அதிகம் படிக்கவில்லை
மேலும் இந்துமதி அதிகம் படிக்கவில்லை என தெரிகிறது. அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அதிகம் படிக்காத உனக்கு எதுக்கு இவ்ளோ சாப்பாடு, குறைவாக சாப்பிடு என சாந்தி, இந்துமதியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது போல் தொடர்ந்து தனது மாமியார் தொல்லை கொடுத்து வந்ததால் இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

4 மாத கர்ப்பிணி
தனது மனைவி தன்னை விட்டு பிரிந்த போதிலும், அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் இந்துமதியை தனது மாமனார் வீட்டுக்கு போய் சமாதானம் செய்து குமரன் அழைத்து வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குமரனும் அவரது தாயின் பேச்சை கேட்டுக் கொண்டு இந்துமதியை அழைக்கால் இருந்துள்ளதாக தெரிகிறது.

மன உளைச்சல்
இதனால் இந்துமதிக்கு அதிக மனஉளைச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தன்னை தொட்டு தாலி கட்டி குடும்பம் நடத்தி, கர்ப்பிணியாக்கிய தனது கணவரும் தன்னை கைவிட்டுவிட்டதால் இனி என்ன செய்வது என சதா சர்வகாலமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ மெசேஜை தனது மூத்த சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அதில் "என் சாவுக்கு குமரனின் அம்மாதான் காரணம், நானும் பாப்பாவும் செல்கிறோம்" என்று கண்ணீருடன் தெரிவித்துவிட்டு இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்த இந்துமதி
இந்த மெசேஜை கேட்டுவிட்டு பதறியடித்துக் கொண்டு மூத்த சகோதரி தனது தாய் வீட்டுக்கு வருவதற்குள் இந்துமதி தூக்கிட்டு இறந்துவிட்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீஸார் இந்துமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications