திங்கட்கிழமை வரை விடுமுறை.. மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் சென்னை மாநிலக் கல்லூரி அறிவிப்பு!
சென்னை: ரூட்டு தல பிரச்சனையால் மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வரும் திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 11 மணியுடன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சுந்தர், சென்னை பிரசிடன்சி கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்திகளை வைத்து சுந்தரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

உடனடியாக வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவர் சுந்தரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, பெரியமேடு காவல்துறையினர் மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாணவர் சுந்தர் தாக்கப்பட்டது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை விசாரணையில் "ரூட்டு தல" விவகாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, கல்லூரிக்கு வரும் மின்சார ரயில் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சேர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிக்கும் மாணவர்களின் கல்லூரி அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னையில் உள்ள கல்லூரிகளில் ரூட்டு தல மோதல் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு மாநிலக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று 11 மணிக்கு மேல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. நாளை மற்றும் வரும் திங்கட்கிழமை அன்றும் மாநிலக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications