தாம்பரம் தனியார் நிறுவனத்திற்குள் மலைப் பாம்பு.. விரைந்த தீயணைப்பு படை
சென்னை: தாம்பரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மலைப்பாம்பு குட்டி ஒன்றை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதி இல்லாத இந்த பகுதியில் எப்படி மலைப்பாம்பு வந்தது? என்றும் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் பாம்புக்கடி என்பது தீராத தலைவலியாக தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2024-2025 ஆண்டில் மட்டும் சுமார் 58,000 பேர் பாம்பு கடியால் உயிரிழந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் நடக்கும் பாம்பு கடி மரணங்களில் இது 50% ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காடு அழிப்பு, வேளாண் நிலம் சுருக்கம் என இதற்கு பல காரணம் சொல்லப்படுகிறது. கண்ணாடி வரியன், கட்டு வரியன், சுருட்டை வரியன் மற்றும் நாகப்பாம்புகள்தான் தமிழகத்தில் ஆபத்தான பாம்புகளாக அறியப்படுகிறது. இது தவிர வேறு சில பாம்புகளும் காணப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் விஷம் கொண்டவை கிடையாது. இருப்பினும், கண்ணில் படும் பாம்புகள் எல்லாவற்றையும் நாம் அடித்து கொன்றுவிடுகிறோம்.
குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் பாம்புகளை பார்த்தால், அதற்கு பாவம் புண்ணியமே நாம் பார்ப்பது கிடையாது. ஒரேயடியாக அடித்து நொறுக்கி விடுகிறோம்.
இப்படி இருக்கையில் தாம்பரத்தில் தனியார் நிறுவனத்திலிருந்து மலைப்பாம்பு குட்டி ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. இந்த பாம்பு சுமார் 2 அடி நீளம் மட்டுமே கொண்டதாக இருக்கிறது. பாம்பை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் பாம்பை மீட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பாம்புகளை பார்ப்பது அரிது. அதிலும் மலைப்பாம்புகளை பார்ப்பது ரொம்பவும் ரேரான விஷயம். இந்த வகை பாம்புகள் அடர் காடுகளில் மட்டுமே காணப்படும். குறிப்பாக வெப்பமண்டல காடுகளில் இருக்கும். இதற்கு விஷம் கிடையாது என்பதால் மனிதர்களை பார்த்தால் ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் கொண்டதாகும். இந்த வகை பாம்புகள் 10 அடியை விட நீளமாகவும் 50 கிலோ வரை எடை வரையும் வளரும்.
எலிகள், பறவைகள், முயல்கள் மற்றும் குரங்குகளை இது இரையாக உட்கொள்கின்றன. ஒருமுறை பெரிய உணவை சாப்பிட்டுவிட்டால், ஓரிரு மாதங்கள் வரை கூட அது உணவில்லாமல் வாழ்ந்துவிடும். சதுப்பு நிலங்கள், பாறை இடுக்குகள், அடர்ந்த காடுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இவை வசிக்கின்றன. பகல் நேரங்களில் ஓய்வெடுத்துவிட்டு, இரவு நேரங்களில் வேட்டையாடும் குணாதிசயம் கொண்ட உயிரினமாகும். விஷம் கிடையாது என்பதால் உடலை சுருட்டி, இரையை மூச்சடைக்க வைத்து கொன்று தின்று விடும்.
வளர்ந்த பெண் பாம்பு ஒரே நேரத்தில் சுமார் 100 முட்டைகள் வரை இடும் என்பதால், இந்த வகை பாம்புகள் அதிக அளவில் பார்க்க முடியும். இருப்பினும், தாம்பரத்தில் பெரிய அளவில் வனப்பகுதி கிடையாது. இங்கு எப்படி மலைப்பாம்பு வந்திருக்கும்? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications