இருமுடி, தைப்பூசத் திருவிழா! மேல்மருவத்தூர் போற பிளானா.. சென்னை ரயில்வேயின் முக்கிய செய்தி!
சென்னை: இருமுடி, தைப்பூச திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் தை மாதம் இருமுடி கட்டும் விழா நடைபெறும். இதற்காக லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு இருமுடியுடன் ஆதிபராசக்தியை தரிசிக்க செல்வர்.

அது போல் தைப்பூசத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போதும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு அம்பாளை தரிசிக்க வருவர். இதற்காக பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சென்னை ரயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை (12653), மதுரை பாண்டியன் (12637), செங்கோட்டை பொதிகை (12661), மன்னார்குடி மன்னை (16179), கொல்லம் விரைவு ரயில் ( 16101), தஞ்சாவூர் உழவன் (16865), சேலம் விரைவு ரயில் (22153), மதுரை வைகை (12635) மற்றும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்த்யோதயா (20691) ஆகிய 9 விரைவு ரயில்களும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.
இவற்றில் சென்னை எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை தவிர, மற்ற ரயில்கள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து இயக்கப்படும் வேறு சில விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த தகவல் சென்னை ரயில்வேகோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications