அடேங்கப்பா.. சென்னை அண்ணா நகரில் வெறும் 10 நிமிடத்தில் 21 மி.மீ மழை- தட தட சென்னை ரெயின்ஸ்!
சென்னை: சென்னை அண்ணாநகரில் வெறும் 10 நிமிடங்களில் 21 மி.மீ. மழை பெய்ததாக சென்னை ரெயின்ஸ் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னையில் கடந்த 31 ஆம் தேதி மாலை முதல் நேற்று வரை கனமழை கொட்டி தீர்த்தது. அதாவது 300 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையின் அளவு 350 மி.மீ. ஆனால் இரு தினங்களில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் இத்தனை மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கொளத்தூர்
கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீர் வடிகாலில் பெண் ஒருவர் தவறிவிழுந்தார். நல்வாய்ப்பாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். அது போல் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது, சில இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சிகளும் உள்ளது.

தண்ணீர்
இந்த நிலையில் நேற்று மாலை வரை மழை பெரும்பகுதிகளில் இல்லாததால் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்தன. இரவு நேரத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெயில் வந்தது. இதனால் சாலைகளில் கொஞ்சமாக இருந்த நீர் காய்ந்தது.

மேக மூட்டம்
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு மேக மூட்டமாக இருந்தது. உடனே மழை பெய்தது. 45 நிமிடங்களாக மழை பெய்து கொண்டே இருந்தது. சென்னையின் கே. கே. நகர் , வடபழனி, மேடவாக்கம், அனகாபுதூர், திநகர், கொடுங்கையூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் , கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, பாலவாக்கம், பள்ளிக்கரணை, ஈசிஆர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை
இதுகுறித்து சென்னை ரெயின்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறயிருப்பதாவது: சென்னை அண்ணாநகரில் கனமழை பெய்தது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை 30 நிமிடங்களில் 45 மி.மீ. மழை பெய்தது. 10 நிமிடங்களில் 21.1 மி.மீ மழை பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் மிகவும் கனமான மழை என்றே சொல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications