சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: சென்னையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவது லேசுபட்ட காரியம் கிடையாது. அப்படி வாங்கிய கார்டில் தவறுகள் இருந்தால் அதை திருத்த ரேஷன் அலுவலகத்திற்கும், இ சேவை மையத்திற்கும் ஏறி இறங்கவே நேரம் சரியாக இருக்கும். இப்படி இருக்கையில் இந்த பிரச்சனைகளை சரி செய்ய இன்று சென்னை முழுவதும் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்று ரேஷன் கார்டில் திருத்தம் செய்துக்கொள்ள விரும்புவோர் செய்துக்கொள்ளலாம் என்றும், அரசின் இதர சேவைகளில் சிக்கல் இருந்தால் இங்கு முறையிட்டு சரி செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாழ வைக்கும் சென்னை
வேலை வாய்ப்புகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் சென்னையில் சிறப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்புக்காக தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் சென்னை நோக்கி நகர்கின்றனர். பின்னர் அங்கேயே திருமணம், குழந்தைகளின் கல்வி என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இப்படி வாழும் மக்களுக்கு ரேஷன் கார்டு மிக முக்கியமானதாக இருக்கிறது.
சென்னையில் ரேஷன் கார்டு
எனவே, சென்னையில் ரேஷன் கார்டு வாங்குகிறார்கள். இப்படி வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. முதலில் சென்னைக்கு உங்கள் முகவரியை மாற்ற வேண்டும். ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமெனில், வீட்டு வாடகை ரசிது இப்படி ஏதாவது தேவை. ஆதார் கார்டை மாற்றிவிட்டால் ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்யலாம்.
புதிய ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துவிட்டு குறைந்தபட்சம் 3 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். இதற்கிடையில் வெரிஃபிகேஷன் வருவார்கள். இப்படி வரும் அதிகாரிகள் வீட்டின் நிலை, வறுமை பின்னணியை கொண்டவர்களா? உண்மையான முகவரி இதுதானா? என்று விசாரிப்பார்கள். பின்னர் உங்களுக்கு இது தொடர்பான மெசேஜ் வரும்.
இறுதியாக ரேஷன் கார்டு வரும். இப்படி வரும் கார்டில் திருத்தம் இருந்தால் அதை சரி செய்வதுதான் தலைவலி பிடித்த வேலை. எனவே இதற்காகத்தான் தற்போது குறைதீர் முகாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கார்டில் திருத்தம்
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.06.2026 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
குறைதீர் முகாம்
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications