சென்னையில் வரலாறு காணாத சம்பவம்.. அடுத்த ஆண்டு குடிநீருக்கு பஞ்சம் இருக்காது! வெதர்மேன் குட் நியூஸ்
சென்னை: இன்றுடன் இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில், சென்னையில் பெய்த மழை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளளன. குறிப்பாக இந்த ஆண்டு சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகள் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பியுள்ளன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை ஏரிகள் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சபட்ச நீர்மட்டத்துடன் நிறைவுற்றுள்ளன. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களும் சென்னையின் நீர் பாசன வரலாற்றில் முதல் முறையாக 100% கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளன. சோழவரம் ஏரி மட்டும் முழு கொள்ளளவை எட்டாதபோதிலும், ஒட்டுமொத்த நீர் இருப்பு சாதகமாக இருக்கிறது.

பருவமழைக்காலம் கலவையான அனுபவத்தைத் தந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இயல்பை விடக் குறைவான மழையைப் பெற்றன. இவற்றில் பற்றாக்குறை மழை பதிவானது. ஆனால், திருவள்ளூர் மாவட்டம் மட்டும் இயல்பை விட அதிக மழையைப் பெற்று தனித்து நின்றது.
தென்மேற்கு பருவமழையுடன் சரியான நேரத்தில் பெய்த திடீர் இடியுடன் கூடிய மழை, பூண்டி மற்றும் ஆரணியாறு படுகையிலிருந்து நீரைத் திறம்பட திசை திருப்பி, சென்னை நீர்த்தேக்கங்களின் நீர் சேமிப்பை கணிசமாக உயர்த்த உதவியது.
இதன் விளைவாக, சென்னை ஆரோக்கியமான ஏரி நீர் இருப்புடன் இந்த ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது நகரின் எதிர்கால நீர் தேவைக்கான முக்கியமான பாதுகாப்பாகும்.
அடுத்து வரும் ஆண்டு எல் நினோவாக இருக்கலாம் என்பதால், தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், கடந்த கால வரலாறு எல் நினோ ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் சிறப்பாகப் பெய்து, நிலைமையைச் சமன் செய்யும் என்பதைக் காட்டுகிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 23 ஆண்டுகளில், இந்த ஆண்டின் இறுதியில்தான் சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகள் நீர் இருப்பு 94 சதவீதமாக இருக்கிறது. இதற்கு முன்னர் இது போல் இருந்தது இல்லை. குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு, சென்னையின் வரலாற்றிலேயே மோசமான அளவுக்கு தண்ணீர் பஞ்சம் நிலவியது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போயிருந்தன. மொத்த நீர் இருப்பு மூன்று சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்தது.
அதேபோல 2016 ஆம் ஆண்டு வர்தா புயலுக்குப் பிறகு, டிசம்பர் இறுதியில் வரும் 16 சதவீதம் மட்டுமே சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் ஏரிகளில் நீர் இருப்பு இருந்தது. இதனை தொடர்ந்து 2004 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நீர் இருப்பு வெறும் 23 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications