பூவிருந்தமல்லி அருகே.. வளர்ப்பாளரை கொடூரமாக தாக்கி மூக்கை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்!
சென்னை: சமீப காலங்களாக வெளிநாட்டு வகை நாய்கள் ஏற்படுத்தும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது பூவிருந்தமல்லி அருகே தொழிலாளி ஒருவரின் மூக்கை ராட்வீலர் நாய் கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூவிருந்தமல்லி அருகே உள்ள காவல்சேரியில் புதியதாக கட்டும் பணி நடக்கும் இடத்தில் கணேஷ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த இடத்தின் உரிமையாளர் ராட்வீலர் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாயை கணேஷ் பராமரித்து வந்த நிலையில், திடீரென இந்த நாய் இன்று கணேஷ் மீது பாய்ந்து கடித்திருக்கிறது.

சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் நாயிடம் போராடி கணேஷை மீட்டிருக்கின்றனர். நாய் கடித்ததில் அவரது மூக்கு துண்டாகியிருக்கிறது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ராட்வீலர் நாய்கள் இந்தியாவின் பூர்வீக நாய்கள் கிடையாது. அவை வெளிநாட்டு இனங்களாகும். ஆட்டு மந்தைகளை கட்டுப்படுத்தவும், எஜமானரை பாதுகாக்கவும் ராட்வீலர்கள் காலங்காலமாக பயன்படுத்தப்பட்ட வந்திருக்கின்றன. எனவே இந்த வகை நாய்கள் இயல்பிலேயே கொஞ்சம் ஆக்ரோஷமானவைதான். இப்படி காட்டிலும், மேட்டிலும் வளர்க்க வேண்டிய இந்த நாயை கொண்டு வந்து நகரங்களில் நான்கு சுவர்களுக்குள் வளர்க்கும்போது அதன் இயல்பான குணங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்த வகை நாய்களுக்கு உடல் எனர்ஜி அதிகம். அதை நகரங்களில் செலவிட முடியாத சூழல் இருப்பதால், இந்த வகை நாய்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. எனவே இது இன்னும் மூர்க்கமாகிவிடுகிறது. எனவே அந்நியர்கள், வளர்ப்பவர்கள் என வேறுபாடு இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் அவை மனிதர்களை தாக்குகின்றன.
சென்னையில் வெளிநாட்டு நாய்கள் ஆக்ரோஷமாக தாக்கியதால் பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தண்டையார் பேட்டையில் பிட்புல் வகை நாய் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலில் சிறுமியின் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டிருந்தது. சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ராட்வீலர் வகை நாய், அதன் வளர்ப்பாளரையே தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications