இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் லிஸ்டில் சென்னை இளைஞர்.. சொத்து மதிப்பு ரூ.21,000 கோடி.. யார் இவர்?
சென்னை: சென்னையில் பிறந்த 31 வயதே ஆன இளம் தொழிலதிபர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நாட்டின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.21,190 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டியின் சிஇஓவும் நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையைச் சேர்ந்த AI தொழில் அதிபரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தனது 31 வயதில், M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025-ல் நாட்டின் இளைய பில்லியனராக இடம்பிடித்துள்ளார். சுமார் ரூ.21,190 கோடி சொத்து மதிப்புடன், பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) என்ற AI ஸ்டார்ட்அப்பின் நிறுவனர் மற்றும் CEO ஆன ஸ்ரீனிவாஸ், தற்போது தொழில்நுட்ப உலகில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.

அறிவியலில் ஆர்வம்
1994, ஜூன் 7 அன்று சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சிறு வயதிலிருந்தே அறிவியலில் ஆர்வம் காட்டினார். ஐஐடி மெட்ராஸில் படிக்கும்போது, அவர் ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லெர்னிங் மற்றும் அட்வான்ஸ்டு ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லெர்னிங் குறித்த வகுப்புகளையும் எடுத்துள்ளார். பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இதை 2021-ல் நிறைவு செய்தார்.
கணினி பார்வைக்கான கான்ட்ராஸ்டிவ் லெர்னிங், ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லெர்னிங், இமேஜ் ஜெனரேஷன், இமேஜ் ரெகக்னிஷன் மற்றும் வீடியோ ஜெனரேஷன் ஆகியவற்றிற்கான டிரான்ஸ்ஃபார்மர் அடிப்படையிலான மாடல்கள் என அவரது ஆராய்ச்சிகள் பல துறைகளில் விரிந்தன.

கூகுளில் ஹலோநெட் உருவாக்கம்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு செமஸ்டர்களில் டீப் அன் சூப்பர்வைஸ்டு லெர்னிங் பாடத்தையும் பயிற்றுவித்ததாக தனது லிங்க்ட்இன் பக்கத்தில் கூறியுள்ளார். டெக் துறையில் ஜாம்பவானாக திகழும் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் தனது தொழில்நுட்ப அறிவை அதில் மேம்படுத்திக்கொண்டார்.
ஓபன் ஏஐ-யில் ரீஇன்ஃபோர்ஸ்மென்ட் லெர்னிங் பிரிவிலும், பின்னர் லண்டனில் உள்ள டீப்மைண்ட் (DeepMind) நிறுவனத்தில் கான்ட்ராஸ்டிவ் லெர்னிங் பிரிவிலும் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, கூகுளில் ஹலோநெட் மற்றும் ரெஸ்நெட் (ResNet-RS) போன்ற விஷன் மாடல்களை உருவாக்குவதில் ஈடுபட்டார்.
நம்பகமான பதில்கள்
அதன்பிறகு மீண்டும் ஓபன் ஏஐ-க்கு ஆராய்ச்சி விஞ்ஞானியாகத் திரும்பி, DALL-E 2 என்ற டெக்ஸ்ட்-டு-இமேஜ் ஜெனரேஷன் மாடலில் முக்கியப் பங்காற்றினார். 2022 ஆகஸ்ட் மாதத்தில், டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஆண்டி கொன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து Perplexity AI நிறுவனத்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நிறுவினார்.
இந்த நிறுவனத்தின் AI அடிப்படையிலான சாட்கள் GPT-3 போன்ற மாடல்களைப் பயன்படுத்தி, பயனர்களின் கேள்விகளுக்கு விரைவான, துல்லியமான மற்றும் நம்பகமான பதில்களை வழங்கும் வகையில் செயல்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
ஸ்டார்ட்அப்களில் முதலீட்டாளர்
2023 ஜனவரி முதல், ஸ்ரீனிவாஸ் ElevenLabs (டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் தளம்) மற்றும் Suno (டெக்ஸ்ட்-டு-மியூசிக் கருவிகளை உருவாக்கும் நிறுவனம்) போன்ற பல வளர்ந்து வரும் AI ஸ்டார்ட்அப்களில் முதலீட்டாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு மத்தியில் ஒரு பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, ஒரே வருடத்தில் 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரை விற்கும் முடிவுக்கு வந்தால், தன்னிடம் வழங்கலாம் என்று கூறி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தார்.












Click it and Unblock the Notifications