நடு ரோட்டில் பேண்ட் ஜிப்பை திறந்து.. அடி வெளுத்தெடுத்த தூய்மை பணியாளர்! சென்னையில் ஷாக்
சென்னை: வேலை பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கைகளுக்கு மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தூய்மை பணியாளர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில், நேற்றிரவு சாலையில் தூய்மை பணியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மொத்தம் மூன்று பெண்கள் சாலையை தூய்மை செய்து கொண்டிருந்தனர்.

பாலியல் சீண்டல்
50 வயது மதிக்கத்தக்க பெண் பணியாளர் ஒருபுறமும், மற்ற இருவர் எதிர்புறம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென பைக்கை ஓரம் கட்டி நிறுத்தியிருக்கிறார். சாலையை சுத்தம் செய்து கொண்டு, பைக் பக்கத்தில் வந்த 50 வயது பணியாளர், இளைஞரை நகருமாறு கூறியிருக்கிறார். ஆனால், இளைஞர் நகரவில்லை. அதற்கு பதில், தன்னுடைய பேண்ட் ஜிப்பை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிக்கிறார். இதை பார்த்து அதிர்ந்த அந்த பணியாளர், கையில் வைத்திருந்த துடைப்பத்தால் நாலு சாத்து சாத்தியுள்ளார்.
சம்பவம் அறிந்து அங்கு வந்த மேற்பார்வையாளர், இது குறித்து புகார் அளிக்குமாறு கூறியிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் நின்றிருந்த காரின் டேஷ் போர்டு கேமராவில் அனைத்து சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
சம்பவம் தொடர்பாக அப்பெண் தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "நான் பெருக்கிக்கொண்டே வந்தேன். எதிரே 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்து நின்று கொண்டார். தள்ளி போக சொன்னதற்கு, கீழே பார்க்குமாறு கூறினார். அந்த இளைஞர் என்ன சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அந்த இளைஞர் பேண்டை கழற்றி அநாகரீகமான செயலில் ஈடுபட்டபோதுதான், நான் பாதுகாப்பற்று இருக்கிறேன் என்று உணர்ந்தேன். இளைஞரின் செயலால் அதிர்ச்சி அடைந்த நான், கையில் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து பலமாக அடித்தேன்.
ஒப்பந்த பணியில் இருக்கும் சிக்கல்
எங்களுக்கு எங்கும் வேலை கிடைக்காததால்தான் இந்த வேலையை வந்து செய்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வேலையிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. முன்பெல்லாம் ஓட்டுநர்கள் உடன் வருவார்கள். ஆனால் இப்போது ஓட்டுநர்களை போடுவது கிடையாது. எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அவர்கள் இருக்கும்போது, யாரும் எங்களை நெருங்க முடியாமல் இருந்தது. எங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.
வசமாக சிக்கிய இளைஞர்
இந்த சம்பவம் நடந்த இடத்தில் நின்றிருந்த காரில், ஒருவர் செல்போனில் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம், இதுபோன்ற அத்துமீறல் நடக்கிறதே நீங்களாவது தட்டி கேட்டிருக்கலாம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அவரோ, செயின் பறிப்பு நடப்பதாக நினைத்து வெளியே வரவில்லை என்று கூறினார். பின்னர் காரின் டேஷ் போர்டு கேமராவின் சிசிடிவி பதிவை என்னிடம் கொடுத்தார்" என்று கூறியிருக்கிறார்.
நள்ளிரவு நேரத்தில் நகரத்தின் தூய்மைக்காக உழைக்கும் பணியாளர்களை அரசு பொறுப்பேற்று பாதுகாப்பதில் என்ன பிரச்சனை? அவர்களை பணி நிரந்தரம் செய்வதும், அவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு மெத்தனமாக இருப்பது ஏற்புடையது அல்ல. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகளை ஒப்படைத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்று பலரும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications