கோயில் தேரோட்டம்.. சென்னை புரசைவாக்கத்தில் இன்று 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல கங்காதரேசுவரர் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்திருக்கிறார். அதன்படி,

கங்காதரேசுவரர் மேல்நிலைப் பள்ளி
இஎல்எம் பள்ளி
எம்சிடிஎம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
எம்சிடிஎம் பெண்கள் பள்ளி
அழகப்பா மேல்நிலைப் பள்ளி
எவாட்ர்ஸ் பள்ளி
சென்னை மாநகராட்சிப் பள்ளி(வெள்ளா தெரு)
ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எதுவும் இல்லை என்பதால், விடுமுறை அறிவிப்பு பள்ளி மாணவர்களை பாதிக்கவில்லை. இன்றைய விடுமுறைக்கு பதிலாக வரும் 21ம் தேதி(சனிக்கிழமை) இந்த பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் பழமையான கோயில்களில் கங்காதரேசுவரர் கோயில் முக்கியமானதாகும். இரகுகுல வம்சத்தைச் சேர்ந்த, சகரன் என்பவரது வம்சத்தில் தோன்றிய பகீரதன் என்பவர் பிரதிசுட்டை செய்த 108வது சிவலிங்கத்தின் திருத்தலம் இது என்று குறிப்பிடப்படுகிறது. மட்டுமல்லாது இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. எனவே இக்கோயில் காசிக்கு இணையான கோயிலாக பார்க்கப்படுகிறது. தற்போது கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications