கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஹரி பத்மனின் ஜாமீன் மனு மீது போலீஸ் பதிலளிக்க உத்தரவு
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.

அதன்கீழ் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு (ஏப்ரல் 25) தள்ளி வைத்துள்ளார். முன்னதாக ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலாஷேத்ரா மாணவிகள் கல்லூரியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்குவதால் அவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதி கல்லூரிக்கு வர நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கல்லூரிக்கு வருவோம் என்றனர். அதன் படி ஹரிபத்மன் உள்பட 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர்.
ஆனால் ஹரி பத்மனோ தான் எந்த மாணவியிடமும் அது போல் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார். அது போல் ஹரி பத்மனின் மனைவி திவ்யா, தனது கணவரை மூத்த பேராசிரியர் பாராட்டியதால் மற்ற பேராசிரியைகள் அவர் மீது பொறாமை கொண்டு இது போல் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார்கள். பாலியல் புகார் கூறிய மாணவிக்கு என் கணவர் பாடம் நடத்தியதில்லை. எனவே இதில் உள்நோக்கம் இருக்கிறது என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications