ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த கோர்ட் மறுப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்போ செந்தில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தனர்.
அப்போது அரசு தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, நாகேந்திரனை சிறை மாற்றம் செய்வது குறித்து அடுத்த விசாரணையில் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமித்துகொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அஞ்சலை, பொற்கொடி, மலர்க்கொடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தற்போதைய சூழலில் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications