சென்னைவாசிகளுக்கு ஒரு நல்ல சேதி.. புதிய மேம்பாலம் விரைவில் திறப்பு.. எங்கேன்னு பாருங்க..!
மாம்பலத்தில் விரைவில் மேம்பாலம் திறக்கப்படுகிறது
சென்னை: மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.. கூட்ட நெரிசலை தவிர்க்க, ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன.
சென்னையின் முக்கிய வியாபார அடையாளமாக திகழ்வது மாம்பலம்... பரபரப்பான வர்த்தக பகுதி.. பாரம்பரிய கட்டிடங்கள் மிகுந்த பகுதி.. அதில் ரயில் நிலையமும் ஒன்று.
பீச் - தாம்பரம் இடையே, புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், எழும்பூர், பூங்கா ரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக, அதிகமான பயணிகள், மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக வந்துதான் போவார்கள்..

கூட்டம்
இதைதவிர, இங்குள்ள ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வந்து செல்வதும் வழக்கம்.. அதிலும், வார விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் மேலும் அதிகமாகும்.. இவர்களில் பெரும்பாலானோர் வந்து செல்ல ரயில்களை தான் பயன்படுத்துவார்கள்.

சிக்கல்
தென் மாவட்டங்களில் இருந்து, மாம்பலம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில்களும், எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.. இதன்காரணமாக இங்கும் கூட்ட நெரிசல் காணப்படும்... ஆனால், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், பிளாட்பாரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்து தான், நடைமேம்பாலம் வழியாக, ஸ்டேஷனை விட்டு வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது..

மேம்பாலம்
அதேபோல, மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து தி.நகருக்குள் நுழைபவர்கள் ரங்கநாதன் தெருவையே பயன்படுத்தி வருகிறார்கள்... இதன்காரணமாகவும் ரங்கநாதன் தெருவில் கூட்டம் வழிந்து நிறைகிறது.. ஜவுளி எடுக்க வருபவர்களும், ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து இறங்கி தி.நகருக்குள் நுழைபவர்களும் திணறும் நிலை ஏற்படுகிறது.. அதனால் இந்த நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது...

இறுதிக்கட்டம்
இதற்கான பணிகளும் சில வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டது... இதற்காகவே தி.நகர் பஸ் நிலையம் அருகில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பணிகள் தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளது.. இறுதிகட்டத்தை எட்டிவிட்டதால், மேம்பாலம் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது... ரூ.27.05 கோடியில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.. விரைவில் இந்த மாம்பலம் நடைமேம்பாலம் திறக்கப்படவும் உள்ளது..

வரப்பிரசாதம்
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நடைமேம்பாலம் திறக்கப்பட்ட பிறகு, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறுபவர்கள் அதனை அதிகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அப்போது ரங்கநாதன் தெருவில் நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த நடைமேம்பாலம் மாம்பலம் பகுதிக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக அமையும் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications