சென்னை டூ பெங்களூர் வெறும் 2.5 மணி நேரத்தில்.. பறந்து இல்லைங்க ரோட்டில் தான்.. எக்ஸ்பிரஸ் சாலை ரெடி
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு பணி நிமித்தமாகவும் குடும்பத்தைச் சந்திக்கவும் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுப் போக்குவரத்து நேரத்தை 3 மணி நேரமாகக் குறைக்க சூப்பர் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
எந்தவொரு நாடும் வளர்ச்சியடையப் போக்குவரத்து உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம். போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் பொதுமக்கள் நகரங்களுக்கு இடையே எளிதாகப் பயணிக்க முடியும்.
மற்ற பகுதிகளுடன் சிறப்பான போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட பகுதிகள் தான் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். அப்போது தான் சரக்குகளும் கூட ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

தென்னிந்திய நகரங்கள்
இதன் காரணமாகவே மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நகரங்களுக்கு இடையே புதிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகின்றன. மேலும், நகரங்களுக்குள் வராமல் கனரக வாகனங்கள் நகரைக் கடந்து செல்ல ரிங் ரோடு எனப்படும் புறவழிச்சாலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் முக்கிய பகுதிகளை இணைக்க இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். தென்னிந்தியாவில் இரு முக்கிய நகரங்களாகச் சென்னையும் பெங்களூரும் உள்ளது.

பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை
இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் சாலையை மத்திய அரசு அமைத்து வருகிறது. 285.3 கிலோமீட்டர் தொலைவில் ரூ.17 ஆயிரம் கோடி செலவில் அமையும் இந்த எக்ஸிரஸ் சாலை போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும். மத்திய அரசு முன்னெடுத்துள்ள இந்த மெகா திட்டம் வரும் மார்ச் 2024க்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் இரு நகரங்களுக்கும் அது பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சாலைகளை ஓட்டி புதிய தொழிற்சாலைகள் அமையவும் வாய்ப்புகள் ஏற்படும்.

எக்ஸ்பிரஸ் சாலை நெடுஞ்சாலை வித்தியாசம்
இந்த குறிப்பிட்ட சாலை குறித்துப் பார்க்கும் முன்பு, நெடுஞ்சாலைக்கும் இந்த எக்ஸ்பிரஸ் சாலைக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம். வாகனங்களை இந்த சாலைகளை அணுகுவது தான் எக்ஸ்பிரஸ் சாலைக்கும் நெடுஞ்சாலைக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும்.. எக்ஸ்பிரஸ் சாலையில் குறிப்பிட்ட சில இடங்கள் வழியாக மட்டுமே எக்ஸ்பிரஸ் சாலைக்குள் வர முடியும். மற்ற எந்த இடத்திலும் வாகனங்களால் எக்ஸ்பிரஸ் சாலைக்குள் வர முடியாது. இதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடியும். மேலும், டிராபிக்கும் ஏற்படாது என்பதால் வேகமாக வாகனங்களை இயக்க முடியும். அதேநேரம் நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, பல இடங்களில் மற்ற சாலைகள் நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும்.

3 மாநிலங்கள்
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, ஒருவரால் 2.5 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரொம்பவே எளிதாகச் சென்றுவிட முடியும். இந்த நெடுஞ்சாலை கர்நாடகாவில் 106 கி.மீ தொலைவிற்கும், ஆந்திர பகுதிகளில் 71 கி.மீ தொலைவிற்கும், தமிழகத்தில் 85 கி.மீ தொலைவிற்கும் அமைகிறது. இது பெங்களூரைக் கர்நாடகாவின் மாலூர், பங்கார்பேட், கேஜிஎஃப் மற்றும் பெத்தமங்களா போன்ற நகரங்களுடன் இணைக்கும்.

வெறும் 2.5 மணி நேரம்
இந்த சாலையில் வாகனங்கள் 120 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இது பெங்களூர் மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 262 கிமீ ஆகக் குறைக்கும். இப்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல 6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் அது 2.5 மணி நேரமாகக் குறையும். இந்த சாலைக்கு டோல் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்தத் திட்டம் முடிந்த பிறகு இந்த சாலையை மங்களூர் வரை நீட்டிப்படு குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மற்றொரு திட்டம்
இது தவிர நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கவும் புதிய சாலையை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த சாலை சூரத்தில் இருந்து நாசிக், அகமதுநகர் வழியாகச் சென்னை, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. ரூ. 48,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக மொத்த 1,270 கிமீ தூரத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications