போயின போயின துன்பங்கள்.. 8 வழிச்சாலை எல்லைக் கல்லை பிடுங்கி எறிந்து கொண்டாடிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

    சென்னை: அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்...எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்... என சேலம்-சென்னை விரைவு சாலைக்காக போடப்பட்ட எல்லை அளவீடு கல்லை புடுங்கி எறிந்து உற்சாகத்தில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை நடைமுறைத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போகிறது. எனவே மக்களின் சந்தோஷம் நிலைக்குமா? இதில் ஜெயிக்கப்போவது மக்களா? அரசா? என்பதை காலம் தான் விடை சொல்லும்.

    எனினும் சேலம்-சென்னை 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு தமிழக அரசுக்கு உள்ளது. திட்டத்தை மொத்தமாக எதிர்க்கும் மக்களுக்கு வெற்றி கிடைக்க எந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. என்பதை பற்றி விரிவாக பார்த்து விடுவோம்.

    பொதுவாக அரசு போடும் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களுக்கு பின்பும் ஏராளமான விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு இருக்கும். அது சென்னை விமான நிலையமாக இருந்தாலும் சரி, திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, இங்கெல்லாம் நிச்சயமாக பல குளங்கள் அழிக்கப்பட்டும், பல ஏக்கர் விளைநிலங்களை பிளந்துமே சாலைகள் போடப்பட்டு இருக்கும்.

     எதிர்ப்பு ஏன்?

    எதிர்ப்பு ஏன்?

    இதேபோல் தான் தமிழகத்தின் அத்தனை நெடுஞ்சாலைகளும் போடப்பட்டு இருக்கின்றன. எனினும் இந்த இடத்தில் நெடுஞ்சாலைகள் ஏற்கனவே சிறிய அளவில் இருந்த போதே, நிச்சயம் என்றாவது ஒரு நாள் பெரிதாகவும் என்பது மக்களுக்கு தெரியும். அதனால் மக்கள் பெரிதாக எதிர்க்கவில்லை. ஆனால் சேலம் எட்டுவழிச்சாலையை மட்டும் மக்கள் கடுமையாக எதிர்த்தது ஏன்? காரணம்....சென்னை- சேலம் பசுமைவழிச்சாலை திட்டம் திடீரென உருவாக்கப்பட்ட திட்டம்.

     பொதுமக்கள் அதிர்ச்சி

    பொதுமக்கள் அதிர்ச்சி

    கூகுள் மேப்பில் நீங்கள் சென்னையில் இருந்து சேலத்தை பார்த்தால் விழுப்புரம்,கள்ளக்குறிச்சியை சுற்றி ஒருவழியும், வேலூர், தர்மபுரி என இன்னொரு வழியும் காட்டும். ஆனால் கூகுள் மேப் படி நேராக பார்த்தால் தாம்பரம், படப்பை வந்தவாசி போளுர், ஆரணி, செங்கம், வாழப்பாடி என ஊர்கள் இருக்கும். இந்த வழியில் அமைத்தால் 277கிலோ மீட்டர்தான் வரும். எனவே இதில் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டது. தமிழக அரசு அனுப்பிய ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்திற்கு உடனே மத்திய அமைச்சர் கட்காரி ஒப்புதல் அளித்தார். அதன்பிறகே மக்களுக்கு சென்னை- சேலம் பசுமைவழிச்சாலை திட்டம் பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     முதல்வர் மகிழ்ச்சி

    முதல்வர் மகிழ்ச்சி

    அதேநேரம் மத்திய அரசு ஒப்புதலால் மகிழ்ச்சி அடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சேலம்-சென்னை இடையே வெறும் 3 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். எரிபொருள் செலவு மிச்சம் ஏற்படும். சாலை செல்லும் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொழில்வளர்ச்சி ஏற்படும் என கூறினார்.

     நிலம் அளவீடு

    நிலம் அளவீடு

    உடனடியாக நிலத்தை அளவிடும் பணிகள் நடந்தன. நிலங்களை அளக்க சேலம் சென்னை இடையே பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது வழக்கும் போடப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்ப்பது சில பயங்கரவாதிகள் தான் என ஆளும் கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

     சாலைக்கு எதிராக வழக்கு

    சாலைக்கு எதிராக வழக்கு

    சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக தர்மபுரி எம்பி அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியினர், திமுகவினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் வழக்கு போட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது. மாநில அரசு 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியும் செயல்படுத்திவிட வேண்டும் எனஅவசரம் காட்டியதாக கண்டித்த நீதிபதிகள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் கண்களை மூடிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர்.

     பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், நில அளவைக்காக ஊண்டப்பட்ட எல்லை அளவீட்டுக்கல்லை பிடுங்கி எறிந்துவிட்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு கிடைத்த மரண அடி என்று பேசிவருகின்றன.

     தமிழக அரசு முடிவு

    தமிழக அரசு முடிவு

    ஆனால் ஆளும் அதிமுக அரசு சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இதனை உறுதிபடுத்தியுள்ளார். எனினும் தேர்தல் முடிந்த பின்பே இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கும என தெரிகிறது.

     ஆய்வு இல்லை

    ஆய்வு இல்லை

    சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் செய்ததாலேயே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஆய்வு அறிக்கைகளில் நிறைய தவறுகள் இருந்ததாலும் திட்டம் ஏற்கப்படவில்லை. ஒருவேளை சுற்றுச்சூழல் அனுமதி உள்பட எல்லா அனுமதிகளையும் வாங்கி பின்னர் 8 வழிச்சாலை நடைமுறைப்படுத்தப்படலாம். ஆனால் அதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். ஒருவேளை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தாலும் கடும் கட்டுபாடுகளை விதிக்கவே வாய்ப்பு உள்ளது. மக்களுக்கு சாதகமான முடிவினை உச்சநீதிமன்றம் எடுக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். எது எப்படி என்றாலும் இந்த திட்டம் இப்போதைக்கு செயல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+