சென்னை டூ தஞ்சாவூர்.. பொல்லாதவன் பாணி.. தோண்ட தோண்ட பைக்குகள் .. மிரளவைத்த இளைஞர்கள்
சென்னை: திருமங்கலம், அரும்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், புழல், கொரட்டூர், வடபழனி, கே.கே.நகர், பேசின்பிரிட்ஜ், செம்பியம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து பைக்குகளை திருடி விற்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பொல்லாதவன் பட பாணியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட விலை உயர்ந்த திருட்டு பைக்குகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் அருகே கோகுல் என்பவர் தனது பல்சர் ரக பைக்கை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் போய்விட்டு வந்து பார்த்த போது, காணாமல் போனது தெரியவந்தது. இதுபற்றி கோகுல் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, பைக் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதிகளில் இருக்கும் சிசிடிவு காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். அதில் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கலிமுல்லா என்கிற அலி (19) மற்றும் அவரது கூட்டாளியான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (24) ஆகியோர் தான் பைக்குகளை திருடியது தெரியவந்தது.
பின்னர், அவர்களைத் திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, இருவரும் திருமங்கலம், முகப்பேர், புழல், கொரட்டூர், வடபழனி, கே.கே.நகர், பேசின்பிரிட்ஜ், செம்பியம், பெரம்பூர் , அரும்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலும் விலை உயர்ந்த பைக்குக்களை திருடி விற்பனை செய்து வந்தார்களாம்.
மேலும், கலிமுல்லாவும், ஹரிகரனும் சென்னையில் திருடியை இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 32 பைக்குக்களை தஞ்சாவூர் மாவட்டம், பணங்குடிதோப்பு என்கிற மீனவ கிராமத்தில் மண்ணுக்குள் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்ய, திருமங்கலம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களை கைபற்றி, சென்னை கொண்டு வந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞர்கள் கலிமுல்லா., ஹரிகரன் ஆகிய இரண்டு பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications