நெருங்கும் தீபாவளி.. சென்னையிருந்து நாளை கிளம்பும் சிறப்பு வந்தே பாரத்.. வேறு என்ன ஸ்பெஷல் ரயில்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மக்களுக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இது நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் வந்தவர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வது வாடிக்கை.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், வைகை, குருவாயூர் என பல ரயில்கள் தினசரியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயிலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், எழும்பூரில் இருந்து நாளை 9ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 11.15க்கு வந்து சேரும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இது நின்று செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06061) நவ., 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரத்திலிருந்து இரவு 07:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications