சென்னையில் பைக், கார் ஓட்டுறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இந்த செய்தி.. சிவ் தாஸ் மீனாவின் அதிரடி
சென்னை: சென்னை பெருநகரப் போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பான ஆலோசனைக்
கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா முக்கியமான அதிரடி முடிவுகள் சிலவற்றை எடுத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், 22.07.2023, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் சென்னை பெருநகரப் போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர்-1, உள்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்கள், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சாலை சீரமைப்பு மற்றும் மேம்பாடு, போக்குவரத்து ஒழுங்கமைவு மற்றும் போக்குவரத்து மேலாண்மை, நடைபாதை கடைகள் மற்றும் துரித உணவகங்களை ஒழுங்குபடுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்த நீண்ட மற்றும் மத்திய வழிமுறைகள் உருவாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. கால சென்னை பெருநகர சாலைகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பருவமழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவற்றுடன், சென்னையில் நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அவற்றுக்கு இணையான மாற்றுச் சாலைகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை பெருநகர மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அவை மூடப்படாமல் விடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சீர்கேடுகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர மாநகராட்சியைப் பொறுத்த மட்டில், சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு ஆகிய துறைகளின் அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும்.
இக்குழுவானது, சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதிச் சான்று வேண்டும் நிகழ்வுகளில், ஒற்றைச் சாளர முறையில், இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, பள்ளம் தோண்டும் இடம், காரணம், பணி முடிக்கத் தேவைப்படும் கால அளவு, பணி முடித்த பின்னர் சாலை சீரமைக்கும் பணி ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்விவரங்கள் உள்ளடக்கிய அனுமதிச் சான்று வழங்கும். இதற்கான செயலி சென்னை பெருநகர மாநகராட்சியால் விரைவில் உருவாக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, வாகன நிறுத்தம் தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், இக்கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஒழுங்குபடுத்துல் மற்றும் வரன்முறை செய்தலை கண்காணிக்க உயர்மட்டக் குழு ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இக்குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை பெருநகர மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் சென்னை பெருநகர போக்குவரத்து மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications