திமுக-காங். கூட்டணிக்குள் ஒரு சலசலப்பு .. மத்திய சென்னையில் உரசினால் திருச்சியில் தீப்பிடிக்குமாம்
சென்னை: காங்கிரஸ் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருவர் நடுவே ஏற்பட்டுள்ள மோதல்தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசும், திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மத்திய சென்னையில் தயாநிதி மாறன் திமுக சார்பிலும், திருச்சியில், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுவதும் அறிந்ததே.
இங்குதான் ஒரு குளறுபடி ஆரம்பித்துள்ளதாக, ஊடகத்தினரிடம், புலம்புகிறார்கள், திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர்.

உரசல்கள்
காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருப்பவர் வீரபாண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள், தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். இவருக்கும், வடசென்னை திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபுவுக்கும் ஏற்பட்ட உரசல், விவகாரங்கள் இரு கட்சி விவகாரங்களை அறிந்த பலரும் தெரிந்த உண்மையாகும்.

தேர்தல் பணி
இந்த உரசல் இன்னும் தொடருவதாகவும், எனவே, மத்திய சென்னையில், காங்கிரஸ் கட்சி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு தேர்தல் பணியாற்றவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

திருச்சி நிலை
இதனால் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் பிரசார பணிகளில் ஈடுபட திமுக நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிருப்தி நீடித்தால், திருச்சியில் திமுக தேர்தல் பணியாற்றாத சூழல் உருவாகும் என்பதால், காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது.

தீவிர ஆலோசனை
எனவே, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து வீரபாண்டியை நீக்கிவிட்டு, ஈவிகேஎஸ், இளங்கோவனுக்கு நெருக்கமான முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கலாமா.. அப்படி நியமித்தால், வீரபாண்டி ஆதரவாளர்கள் அதிருப்தியை தேர்தல் நேரத்தில் சந்திக்க வேண்டி வருமே என்றெல்லாம், தீவிர ஆலோசனையில் உள்ளாராம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.












Click it and Unblock the Notifications