வேளச்சேரியில் பரபரப்பு.. சடலம்தான் மிஞ்சியது.. ஒருவர் உடல் மீட்பு: மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து வந்த நிலையில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.. மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதால், வேளச்சேரியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை.. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத நிலைமை உள்ளது.. குறிப்பாக, புறநகர்ப்பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவைகளை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேளச்சேரி: இந்நிலையில், 5 நாளைக்கு முன்பு, மிக்ஜா புயலில் வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டதால், அந்த பள்ளத்தில் அடிக்குமாடி கட்டிடமானது, தரையில் இறங்கிவிட்டது.. கண்டெய்னர் சரிந்து விழுந்துவிட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக சொல்கிறார்கள்..
5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.. அப்பார்ட்மென்ட் கட்டுவதற்காக இந்த கட்டுமான வேலை நடந்ததாக சொல்கிறார்கள்..
இதற்காகவே இந்த 50 அடி பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது.. இந்த பள்ளத்தின் பக்கத்திலேயே, ஊழியர் சரக்கு பெட்டகத்தில் செய்யப்பட்ட தற்காலிக அறையானது, திடீரென சரிந்து 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது..
சிறுகாயங்கள்: இதில் சிக்கிய 8 பேரில் 6 பேர், சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் 2 பேரை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் படையினர் பள்ளத்தில் விழுந்த ஊழியர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.. என்.எல்.சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்களும் இந்த மீட்பு பணியில் பங்கு கொண்டன. அப்போது, இந்த பள்ளத்தில் மண் சரிவும் ஏற்பட்டதால், நிவாரண பணியில் சிக்கல்கள் ஏற்பட்டன.
நேற்று 4வது நாளாக மண்ணுக்கடியில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது. கிட்டத்தட்ட 85 மணி நேரத்துக்கும் மேலாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாத நிலையில் அவர்களின் உடல் நிலை குறித்த கவலையும் பதற்றமும் எழுந்தவாறே இருந்தது.
பதற்றம்: மண்ணுக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள் உணவு, குடிநீரின்றி சமாளிக்க முடியுமா? சுவாசிப்பதற்கு வழியுள்ளதா? என்ற கலக்கங்கள் சூழ்ந்தவாறே இருந்தன.. எனினும், நேற்றிரவுக்குள் பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், இன்று விடிகாலை ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. பள்ளத்தில் விழுந்த 5வது நாளில், உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்யேகமான குழாய்கள் வரவழைக்கப்பட்டன.. பம்பிங் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியை நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில், அந்த பணிகள் முடிந்த நிலையில், இன்று விடிகாலை ஒருவரின் உடலை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறையினர் கண்டெடுத்தனர்.
தொடரும் பணிகள்: அதிகாலை 3.30 மணிக்கு மீட்கப்பட்ட அவரது உடல், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளத்தில் மூழ்கிய மற்றொருவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. அநேகமாக இன்று மதியத்திற்குள் அவரது உடலும் மீட்கப்பட்டுவிடும் என தெரிகிறது. இதனால், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் நரேஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக போஸ்ட் மார்ட்டத்தக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.. இதில் சிக்கிய ஜெயசீலனின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டேயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. பள்ளத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications