வீடு வீடாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. சென்னையில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்.. இனி என்ன நடக்கும்?
சென்னை: சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ஒரு லட்சம் கட்டிடங்களில் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை நிறுவுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இணையம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், நேரடி நீர் பயன்பாட்டைக் இதன் மூலம் கண்காணிக்க உள்ளனர். நகரத்தின் நீர் நுகர்வு மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
₹392.68 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதிக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் சென்னை மெட்ரோவாட்டர் இந்த ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ உள்ளது.
ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள் - சென்னையின் புதிய திட்டம்
2500 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய வீடுகளில் இந்த மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அந்த வீடுகளின் நீர் பயன்பாடு கண்காணிக்கப்படும். ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் இதற்கான டெண்டர் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான வாட்டர் மீட்டர் கொள்கையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் நீர் பயன்பாட்டை அளவிடுதல், தரவின் அடிப்படையில் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் செலவு குறைவு போன்றவற்றை ஊக்குவிப்பதாகும். இதுவரை சுமார் 13,000 மீட்டர்கள் சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளன. இது பின்னர் சென்னை முழுக்க விரிவாக்கம் செய்யப்படும்.
இந்த புதிய மீட்டர்கள் நேரடி நுகர்வு தரவை அனுப்பும் திறன் கொண்டது. இந்த மீட்டர் மூலம் வரும் நம்பர்.. நேரடியாக ஸ்மார்ட் பில்லிங் அமைப்புடன் இணைக்கப்படும். இதனால் நுகர்வோர் தங்கள் நீர் பயன்பாட்டை தெளிவாக கண்காணிக்க முடியும். இந்த அமைப்பு பொது-தனியார் பங்களிப்புடன் (Hybrid Annuity Model (HAM)) செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதிரியின் கீழ், ஒப்பந்ததாரர் 15 ஆண்டுகளுக்கு மீட்டர்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் அளவீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார். மாநில அரசு இந்த திட்டத்திற்கும் நிதியுதவி அளிக்கும். சென்னையில் நீர் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பருவகால நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க, தற்போதுள்ள விநியோகத்தை திறம்பட நிர்வகிக்க இந்த திட்டம் உதவியாக மாறும்..
சென்னை மெட்ரோவாட்டர் 17 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோருக்கு நீரை விநியோகம் செய்து வருகிறது. உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப, 2027 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 80% வீட்டு இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீரை சேமிக்க மீட்டர் திட்டம்
ஒரு கிலோ லிட்டர் நன்னீரை சுத்திகரிக்க ₹8 செலவாகிறது, ஆனால் அதே அளவு கடல் நீரை குடிநீராக்க ₹46 வரை செலவாகிறது. மீட்டர்கள் பொருத்தப்பட்டால் சரியான பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கழிவுகளை குறைக்கவும், குறிப்பாக பற்றாக்குறை காலங்களில் விநியோகத்தை சமமாக திட்டமிடவும் முடியும்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கும் இந்த திட்டம் வழி வகுக்கும். மீட்டர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுவதால் குடிமக்கள் நிலத்தடி நீரை குறைவாக பயன்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது வெள்ள அபாயத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீரைச் சேமித்து நகரத்தின் ஒட்டுமொத்த நீர் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.












Click it and Unblock the Notifications