சென்னை லோகேஷ்.. கல்யாணம் ஆன சில மணி நேரத்தில் நுரை தள்ளியது.. 2-வது கணவரையும் பறிகொடுத்த பெண்
சென்னை: சென்னை பெரவள்ளூரில் கொரோனா காலத்தில் முதல் கணவரை பறிகொடுத்த மணமகள், திருமணம் நடந்த அன்றே 2-வது கணவரையும் இழந்துள்ளார். திருமணம் நடந்த சிலமணி நேரத்தில் புதுமாப்பிள்ளை திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் ஒன்றாக பார்ப்போம். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ புதிய உறவாக வருபவர் தான் கணவன்.. அம்மா, அப்பா உடன் வளர்ந்த பெண், யார் என்றே தெரியாத ஒருவரின் வீட்டிற்கு போய் வாழ வேண்டும். அவர்களின் குடும்ப உறவுகளை தங்கள் உறவாக நினைக்க வேண்டும். அவர்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், குலதெய்வம் வரை எல்லாமே மாறும்..

கணவன் என்ற உறவு வாழ்வில் கடைசிவரை வரும் உறவு ஆகும். அந்த உறவை எதிர்பாராத விதமாக பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது பெரிய துயரம் ஆகும். அது ஒருமுறைக்கு இருமுறை ஒரு பெண் கணவனை பறிகொடுக்கிறார் என்றால் அது துயரத்தின் உச்சம். சென்னையில் திருமணம் நடந்த சிலமணி நேரத்தில் புதுமாப்பிள்ளை திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி உயிரிழந்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் 6-வது தெருவைச் சேர்ந்த 40 வயதாகும் லோகேஷ் இன்ஜினியர் ஆவார். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் 9ம் தேதி அன்று இன்ஜினியர் லோகேஷ்க்கும், திருச்சியை சேர்ந்த 36 வயதாகும் ராஜலட்சுமி(36) என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்வது என பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.
லோகேஷ்-ராஜலட்சுமி தம்பதிக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படியே திருப்போரூர் முருகன் கோவிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் மற்றும் உறவினர்கள், பெரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டுக்கு வந்தார்கள்.
மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்தனர். அப்போது லோகேஷ், திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். இதனால் மணமகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக லோகேசை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. இதையடுத்து அங்கு வந்த திரு.வி.க.நகர் போலீசார், லோகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே லோகேஷ் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினார்கள்,
இதனிடையே மணமகள் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது முதல் கணவர் கொரோனா காலத்தில் உடல் நலமின்றி உயிரிழந்தார். இந்தநிலையில்தான் லோகேசை 2-வதாக திருமணம் செய்த அன்றே ராஜலட்சுமி பறிகொடுத்துள்ளார். திருமணம் நடந்த அன்றே 2-வது கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications