குடும்ப பிரச்சனை.. சின்ன மாமியாரை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற மருமகன்.. சென்னையில் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் அதிகாலை கோலம் போட்டுக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், கொலையான அவரின் அக்கா மகளின் கணவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சென்னையின் அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தனம். இவரின் அக்கா மகள் செல்வி கடந்த ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நட்பு நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது. இதன்பின் செல்வி - காளிமுத்து தம்பதியினர் திருப்பூரில் வாழ்ந்து வந்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் காளிமுத்து பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே திருமணம் முடிவடைந்த சில மாதங்களிலேயே செல்வி மீது சந்தேகம் கொண்டு காளிமுத்து தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நேரம் சைக்கோ போல் அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த செல்வி, காளிமுத்துவை விட்டு பிரிந்து அவரின் அம்மா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இதன்பின் காளிமுத்து தரப்பில் உறவினர்கள் சிலர் தம்பதியை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஆனால் செல்வி, ஒவ்வொரு முறையும் காளிமுத்துவுடன் வாழ மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி இருக்கிறார்.
இதற்கிடையே காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி வேலையை விட்டுவிட்டு, திருவொற்றியூரில் உள்ள இறைச்சி கடையில் பணியில் சேர்ந்துள்ளார். இதன்பின் தன்னுடன் வாழ விரும்பாத மனைவி செல்வியை கொலை செய்ய முடிவெடுத்து, அவரின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களாகவே நோட்டம் விட்டு வந்திருக்கிறார்.
கடந்த 3 நாட்களாக வீட்டின் அருகே மாஸ்க் அணிந்து கொண்டு காளிமுத்து நோட்டம் விட்ட நிலையில், அவரை அடையாளம் கண்டு செல்வியின் சித்தி தனம் கடுமையாக திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து, தனது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்ன மாமியாரான தனத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
அப்போது அருகில் வசித்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பின் சம்பவ இடம் வந்த போலீசார், தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக சின்ன மாமியாரை கொலை செய்த மருமகனின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications