வேலைக்கார சிறுமி அழகாக இருந்ததால்.. கணவர் ஆசைப்படுவாரோ என கொடுமை செய்தேன்.. சென்னை பெண் வாக்குமூலம்
சென்னை: எங்கள் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார். அவர் மீது என் கணவருக்கு ஆசை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக சென்னை அமைந்தகரை கொடூர பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் , சதாசிவ மேத்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). இவருக்கு நாசியா என்ற மனைவியும் 6 வயதில் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி நவாஸ் வீட்டில் தங்கியபடியே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வீட்டு வேலைகளை பார்த்து வந்ததாக தெரிகிறது. தீபாவளி பண்டிகை அன்று நவாஸ் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி, குளியலறைக்குச் சென்றுள்ளார்.
அவர் நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வராததால் சந்தேகமடைந்த நவாஸும் அவருடைய மனைவி நாசியாவும் குளியலறை கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.
பின்னர் நவம்பர் 1 ஆம் தேதி நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமியின் மரணம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார், நவாஸ் வீட்டிற்கு சென்று அங்கு குளியலறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் தீக்காயங்களும் சிகரெட்டால் சுட்ட காயங்களும் இருந்தன. இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் நவாஸ்- நாசியா தம்பதியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கணவன்- மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
தீபாவளி அன்று காலை நவாஸ், நாசியா, அவருடைய நண்பர் லோகேஷ் ஆகியோர் சிறுமியை கொடூரமாக தாக்கி அவரது மார்பில் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்தாராம். இதனால் மூவரும் அந்த சிறுமியை குளியலறைக்குள் இழுத்து போட்டுவிட்டு ஊதுபத்தியை கொளுத்தி வைத்து விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டனர்.
விசாரணையில் லோகேஷ்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி கொலை குறித்து நாசியா கூறுகையில், கருப்பாக இருந்தாலும் அந்த சிறுமி கலையாக இருந்தார். இதனால் எனது கணவரின் பார்வை அவர் மீது திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 16 ஆம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தற்போது அந்த 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications