சென்னையில் பிரபல ரௌடி சிடி மணி திடீர் கைது.. கோர்ட் பக்கம் வந்தவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னையில் பிரபல ரௌடி சிடி மணி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த ரௌடி சிடி மணியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டன். தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு அளவில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யனாக இருந்த சிடி மணி, அவரது மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்தார்.

சிடி மணி மீது அடையாறு, சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரௌடி சிடி மணி கடந்த 2007, 2009, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாக இருந்த நிலையில், 2021ல் மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டும், ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் சிடி மணி. தலைமறைவாக இருந்த சிடி மணி, வாரண்ட் ரீ-கால் செய்ய தனது வழக்கறிஞருடன் அல்லிக்குளம் நீதிமன்றம் வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் சிடி மணி. சிடி மணி கைது சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications