காணாமல் போன மனைவி.. ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் வீட்டுக்கு சென்ற கணேசன்! போனது ஒரு உயிர்!
சென்னை ஜாபர்கான் பேட்டையில் காணாமல் போன மாயமான மனைவி குறித்து பதில் சொல்லாததால் ஆத்திரம் அடைந்து கள்ளக்காதலனின் மாமனாரை கணேசன் என்பவர் அடித்து கொலை செய்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை ஆர்.பி.நகரை சேர்ந்தவர் கணேசன்(28). கூலித் தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாராம்.
இதனிடையே இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் பழகி வந்துள்ளாராம். இது பின்னாளில் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணேசன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தினேஷ் வீட்டிற்கு வந்து சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளாராம்.
மனைவி மாயம்
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவி திடீரென வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் பல இடங்களில் தேடி இருக்கிறார். ஆனால் மனைவி கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு தெரிந்தவர்கள் உங்கள் மனைவி, தினேஷ் வீட்டில் இருப்பதாக கணேசனிடம் சொல்லியிருக்கிறார்கள்.
வீட்டில் கைகலப்பு
இதனால் கணேசன் பயங்கரமாக குடித்துவிட்டு நேராக கோபத்துடன் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. அங்கு தினேஷின் மாமனார் புண்ணியகோடி (70) மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, கணேசன் அவரிடம், "உன் மருமகன் தினேஷ் என் பொண்டாட்டியை எங்கேயா ஒளிச்சு வைத்து இருக்கிறான்" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு தினேஷின் மாமனார் புண்ணியகோடி, "எனக்கு தெரியாது. தினேஷ் ஜெயிலில் இருக்கிறான்" என்று கூறினார். ஆனால் கணேசன் அதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது.
அடித்துக்கொலை
இருவரும் சண்டை போட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணேசன் கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் புண்ணியகோடியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த புண்ணியகோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதன் பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து, பொதுமக்கள் குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புண்ணியகோடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஒடிய கணேசனை தேடி வருகின்றனர்.