கணீர் கமல் குரல்.. தமிழர் வரலாற்றை கண்முன் கொண்டுவந்த டாப் தொழில்நுட்பம்.. வியந்த மோடி.. சபாஷ் டீம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில் டாக்குமெண்டரி ஒளிபரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய இந்த ஆவணப்படம் அங்கு இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video
சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் விழா நடைபெற்று வருகிறது.
இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கலாச்சாரம்
இந்த தொடக்க விழாவில் இன்று தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் விதமாக நடிகர் கமல்ஹாசன் பேசினார். மிகப்பெரிய எல்இடி மேடையில் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு கலை நாடகங்களை அரங்கேற்றினர். பின்னால் ஒலிக்கும் கமல்ஹாசன் குரலுக்கு ஏற்றபடி இங்கே கலைஞர்கள் நடித்துக்காட்டினர். தமிழ்நாட்டின் வரலாற்றை ஒவ்வொரு காலமாக கமலஹாசன் சொல்ல சொல்ல அதை மேடையில் கலைஞர்கள் பலர் நடித்துக்காட்டினார்கள்.

கமல்ஹாசன்
முற்சங்க காலம், சங்க காலம், பாண்டிய, சேர, சோழர்கள் ஆண்ட காலங்களை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசினார். அதேபோல் திருக்குறள், கண்ணகியின் சிலப்பதிகார வரலாறு உள்ளிட்ட பல விஷயங்களை கமல்ஹாசன் இந்த ஆவணப்படத்தில் பேசினார். 3டி எல்இடி ஸ்கிரீனில் இதற்கு ஏற்றபடி காட்சிகள் ஓடிக்கொண்டு இருந்தது. இடை இடையே கலைஞர்கள் மேடையில் தோன்றி கமலின் வரிகளுக்கு ஏற்ப நடித்துக் காட்டினார்கள்.

கரிகாற்சோழன்
முதலாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணைக் கட்டியது முப்பரிமாண படத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் குறித்த சிறப்பம்சங்கள் ஒளிபரப்பப்பட்டது. ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று போரிட்டு வென்றது சிறப்பாக நடித்துக்காட்டப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலைகள் சிலம்பாட்டம் பற்றி சிறப்பான விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி நடித்துக்காட்டப்பட்டது.

பெருமை
திருவள்ளூவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று கமல்ஹசன் பின்னணியில் பேசினார். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வரலாறு அப்படியே நடித்துக் காட்டப்பட்டது. அதேபோல் சுனாமியால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சேதங்கள் மிகவும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. தமிழா தமிழா கண்கள் கலங்காதே பாடல் ஒலிக்க.. நாங்கள் மீண்டும் எழுந்து வந்தோம் என்று கமல்ஹாசன் சொல்ல தத்ரூபமாக காட்சிகள் அமைக்கப்பட்டு மேடையில் நடனம் அரங்கேற்றப்பட்டது.

ஆவணப்படம்
ஆவணப்படத்தின் முடிவில் யாதும் ஊரே யாவரும் கேளீர் இதுவே தமிழகத்தின் பண்பாடு என்று பாரம்பரியம் பற்றி நடித்துக்காட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் கமல்ஹாசன் குரல் மிகவும் அழுத்தம், திருத்தமாக அமைந்து இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த ஆவணப்படத்தை மெய் சிலிர்க்கும் வகையில் இயக்கி இருந்தார். தமிழ் கலாச்சார செழுமை மற்றும் நமது அணைகள், வணிகம் போன்ற பெருமைகளை கமல்ஹாசன் குரலில் சிறப்பாக அனிமேஷன் மூலம் காட்டியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஒரு டாக்குமென்டரி திரைப்படம்.. தமிழர்களின் மொத்த வரலாற்றை பார்க்கும் உணர்வை கொடுக்கும் அளவிற்கு சிறப்பான உழைப்பு இதில் போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications