ஆளுநருக்கு எதிராக எடுக்கும் அஸ்திரம்.. தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய சிதம்பரம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் சிதம்பரம் களமிறங்கியுள்ளது ஆட்டத்தை மாற்றியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார். மேலும் பெரும்பான்மையுடன் எந்த கட்சி வந்தாலும் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

களமிறங்கிய சிதம்பரம்
ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐ யூஎம்எல் ஆகியோரிடம் தவெக ஆதரவு கேட்டுள்ளது. இதில் ஐயூஎம்எல் திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவுக்கு தான் கட்டுப்படுவோம் என்று கூறிவிட்டனர். சிபிஎம், சிபிஐ, விசிக ஆகியோர் தங்களின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு. அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல. இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு 1994 (3) SCC 1. இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications