செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல.. ஆனால்.. ஐகோர்ட் பரபர தீர்ப்பு!
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்றும், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால் எந்த பலனும் இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். எனினும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரக்கூடாது எனக் கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக இன்னமும் இருக்கிறார் என விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேவலு அமர்வில் விசாரணை நடைபெற்றது.
'குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமும் சட்ட விதிகளும் தடை விதிக்கவில்லை' என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், 'ஆளுநர் சட்ட விதிகளின்படியே செயல்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜியால் அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்' என வாதங்களை வைத்தனர்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேவலு அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவிவித்துள்ளனர்.
மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் எந்தப் பலனும் இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications