போடு வெடிய.. நூலகங்களுக்கு இவ்வளவு புத்தகங்களா! காமராஜர் பிறந்த தினத்தில் அள்ளி வழங்கும் முதலமைச்சர்
சென்னை: ஆண்டு தோறும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி 'கல்வி வளர்ச்சி' நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இதனை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நூலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 7,000 புத்தகங்களை வழங்குகிறார்.
கல்வி வளர்ச்சி நாளை அனைத்து பள்ளிகளும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று சனிக்கிழமையாக இருந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது செய்த சிறப்பான பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும்.

இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும். என பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி வளர்ச்சி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் பொது நூலகங்களுக்கு சுமார் 7,000 புத்தகங்களை பரிசாக வழங்குகிறார்.
இன்று சென்னை நங்கநல்லூரில் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். அதில், தான் பெற்ற புத்தகங்களிலிருந்து சுமார் 7,740 புத்தகங்களை தமிழகத்தின் பல்வேறு பொது நூலகங்களுக்கு முதலமைச்சர் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சமீப நாட்களாக தன்னை சந்திக்க வரும் நபர்கள் துண்டு, சால்வையை கொண்டு வருவதற்கு பதில் புத்தகங்களை கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். இப்படியாக ஏராளமான புத்தகங்கள் குவிந்தன. இந்நிலையில் இப்புத்தகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், நூலகங்களுக்கு அர்ப்பணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications